தமிழகத்தில் ஆக.2-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஆக.2-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் ஆக.2-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குஜராத் – வடக்கு கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. மேலும் தமிழகம் நோக்கி வீசும் மேற்குதிசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது.

இதன் காரணமாக, நாளை (ஜூலை 28) முதல் 31-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளையும், நாளை மறுநாளும் ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் வீசக்கூடும். ஆக.1, 2 தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளை முதல் 31-ம் தேதி வரை சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக அவலாஞ்சியில் 26 செமீ, நீலகிரி மாவட்டம் மேல் பவானியில் 19 செமீ, கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 17 செமீ, நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் 16 செமீ, கோவை மாவட்டம் சின்கோனாவில் 8 செமீ, உபாசி, வால்பாறை, சோலையார், நீலகிரி மாவட்டம் கிளன்மார்கன் ஆகிய இடங்களில் தலா 7 செமீ, நீலகிரி மாவட்டம் கூடலூர் சந்தை, எமரால்டு, மேல் கூடலூர், பார்வூட், செருமுள்ளி, தேவாலா, பந்தலூர் ஆகிய இடங்களில் தலா 6 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in