தவெக கட்சிக் கொடியில் உள்ள வண்ணங்களை நீக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

தவெக கட்சிக் கொடியில் உள்ள வண்ணங்களை நீக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு
Updated on
1 min read

சென்னை: தவெக கட்சி கொடியில் இடம்பெற்றுள்ள வண்ணங்களை நீக்கக் கோரி தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை, தமிழக அரசு பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்டு அறக்கட்டளையாக செயல்பட்டு வருகிறது. இந்த சபைக்கு சிவப்பு - மஞ்சள் - சிவப்பு நிறங்கள் இடம்பெற்றுள்ள கொடி உருவாக்கப்பட்டு கடந்த 2023-ம் ஆண்டு வர்த்தக முத்திரைக்கான பதிவையும், சான்றிதழ்களையும் பெற்றுள்ளது.

இந்த நிலையில் தவெக கட்சித் தலைவர் விஜய் கடந்த 2024 தொடங்கி கட்சியின் கொடி அறிமுகம் செய்தார். அதில் சிவப்பு - மஞ்சள் - சிவப்பு நிறங்கள் இடம் பெற்றிருந்தது. இதை எதிர்த்தும், தவெக கட்சி கொடியில் உள்ள வண்ணங்களை நீக்க உத்தரவிடக் கோரியும் தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை நிறுவனர் தலைவர் பச்சையப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை மட்டுமே குறிப்பிட்ட நிறங்களை கொண்ட கொடியை பயன்படுத்த உரிமை உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. ஏற்கெனவே தவெக கட்சிக் கொடியில் உள்ள யானை சின்னத்தை அகற்றக் கோரி பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், தவெக கட்சி கொடியில் இடம்பெற்றுள்ள வண்ணத்தை நீக்க கோரி மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது அக்கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in