ஜூலை 15 முதல் கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

ஜூலை 15 முதல் கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் வரும் 15-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்குதிசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று (ஜூலை 11) முதல் 15-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும், 16, 17 தேதிகளில் ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், 15 முதல் 17-ம் தேதி வரை நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.

தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கிமீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம், திருச்செங்கோடு, ஈரோடு மாவட்டம் பவானி, நீலகிரி மாவட்டம் நடுவட்டம், பார்வூட், சேலம் மாவட்டம் ஏற்காடு ஆகிய இடங்களில் தலா 3 செமீ, நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம், கோவை மாவட்டம் உபாசி, வால்பாறை, சின்கோனா, சின்னக்கல்லார், தேனி மாவட்டம் வீரபாண்டி உள்ளிட்ட இடங்களில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in