Published : 02 Jul 2018 08:30 AM
Last Updated : 02 Jul 2018 08:30 AM

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 13 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு; நீர்மட்டம் 58.23 அடியை எட்டியது

மேட்டூர் அணைக்கான நீர் வரத்து விநாடிக்கு 13 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. அணையின் நீர் மட்டம் 58.23 அடியாக உயர்ந்துள்ளது.

காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக கர்நாடகாவில் உள்ள கபினி, கேஆர்எஸ் (கிருஷ்ணராஜ சாகர்) உள்ளிட்ட அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. கபினி அணை முழுக்கொள்ளளவை எட்டிவிட்டதால், உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் காலை மேட்டூர் அணைக்கான நீர் வரத்து விநாடிக்கு 1,414 கனஅடியாகவும், நீர் மட்டம் 57.11 அடியாகவும் இருந்தது. கபினியில் திறக்கப்பட்ட உபரி நீர் நேற்று முன்தினம் மாலை வரத் தொடங்கியதால் அன்று நள்ளிரவு மேட்டூர் அணைக்கான நீர் வரத்து விநாடிக்கு 10,000 கனஅடியை எட்டியது.

நேற்று காலை நீர் வரத்து விநாடிக்கு 10,383 கனஅடியாக இருந்தது. நேற்றிரவு விநாடிக்கு 13,000 கனஅடியாக மேலும் அதிகரித்தது. நீர்வரத்து அதிகரிப்பால் அணையின் நீர் மட்டம் 58.23 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 23.38 டிஎம்சி-யாக உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி குடிநீருக்காக திறக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x