உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்: சென்னை மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதம் ரத்து

உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்: சென்னை மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதம் ரத்து
Updated on
1 min read

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகி மன்னிப்புக் கோரியதால் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை உயர் நீதிமன்றம் திரும்பப் பெற்றது.

சென்னை மாநகராட்சியின் ஐந்தாவது மண்டலத்தில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞரும், முன்னாள் கவுன்சிலருமான ருக்மாங்கதன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஐந்தாவது மண்டலமான ராயபுரத்தில் உள்ள விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இதேபோல பிற மண்டலங்களில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.

கடந்த 2021 டிசம்பரில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, சென்னை மாநகராட்சி ஆணையருக்கு எதிராக ருக்மாங்கதன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் அமர்வு, உத்தரவை அமல்படுத்ததாததற்காக சென்னை மாநகராட்சி ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதிகள், இத்தொகையை ஆணையரின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்து, அதை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்க உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற உத்தரவுப்படி ஆணையர் குமரகுருபரன் நேரில் ஆஜராகி இருந்தார். இதனையடுத்து,ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே மீறவில்லை எனவும் நடந்த தவறுக்கு முழுப் பொறுப்பு ஏற்பதாக ஆணையர் கூறியதாகவும் தெரிவித்தார்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை திரும்பப் பெறுவதாக தெரிவித்தனர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in