

சென்னை: சேலம் முத்துமலை முருகன் கோயிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சிறப்பு வழிபாடு நடத்தினார். அப்போது, அவருக்கு ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ பயணம் வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நடத்தப்பட்ட வெள்ளி வாள் வழங்கப்பட்டது.
இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு, சட்டமன்றத் தொகுதி வாரியாக, தொடர் பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இப்பயணத்தின் மூன்றாம் நாளான இன்று (10.7.2025) காலை சேலம் மாவட்டம், ஏத்தாப்பூர் பகுதியில் உள்ள ஸ்ரீ முத்துமலை முருகன் திருக்கோயிலில் எடப்பாடி பழனிசாமி சிறப்பு வழிபாடு நடத்தினார். அப்போது, எடப்பாடி பழனிசாமிக்கு, அவரது எழுச்சிப் பயணம் வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நடத்தப்பட்ட வெள்ளி வாள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வின்போது, கழக அமைப்புச் செயலாளரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர், சேலம் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவருமான இளங்கோவன், பெரம்பலூர் மாவட்டக் கழகச் செயலாளர் இளம்பை ஆர். தமிழ்ச்செல்வன், விவசாயப் பிரிவு துணைச் செயலாளர் ஜெயசங்கரன், கங்கவல்லி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நல்லதம்பி, வீரபாண்டி தொகுதி எம்எல்ஏ ஆ. ராஜா (எ) ராஜமுத்துராஜா உள்ளிட்ட நிர்வாகிகளும் உடனிருந்தனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.