Published : 15 Jul 2018 10:55 AM
Last Updated : 15 Jul 2018 10:55 AM

பெண்களுக்கு சாதகமான சட்டங்கள் இருந்தும்  இந்தியாவில்தான் குற்றங்கள் அதிகமாக நடக்கிறது: குஜராத் காங்கிரஸ் எம்.பி. அமீ யாக்னிக் குற்றச்சாட்டு

பெண்களுக்கு சாதகமாக இந்தியா வில் பல சட்டங்கள் இருந்தும், குற்றங்களும் இங்குதான் அதிகமாக நடக்கின்றன என்று குஜராத் மாநில காங்கிரஸ் எம்.பி. அமீ யாக்னிக் குற்றம் சாட்டினார்.

தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் நேற்று ‘பெண்களின் முன்னேற்றத்துக்கு நீதித் துறையின் பங்கு’ என்ற தலைப்பில் கருத்தரங்கு மற்றும் பெண் கொடுமைக்கு எதிராக குரல் கொடுத்து வரும் குஜராத் காங்கிரஸ் எம்.பி. அமீ யாக்னிக்குக்கு பாராட்டு விழா நடந்தது.

இந்த விழாவில் தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் கே.சாந்தகுமாரி, ஆந்திரா உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் எம்.பாஸ்கரலட்சுமி, அகில இந்திய பெண் வழக்கறிஞர்கள் கூட்டமைப்புத் தலைவர் ப்ரீத்தி ஷா மற்றும் உச்ச நீதிமன்ற, ஆந்திரா, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் பி.வி.எஸ்.கிரிதர், ஜி.சுவாதி, சந்திரா ராஜன், ஆர்.எஸ்.அகிலா, அபிஷா ஐசக் மோகன்லால், மூத்த வழக்கறிஞர் என்.கிருஷ்ணவேணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம்.ஜெயச்சந்திரன், அமீ யாக்னிக்கை பாராட்டி கவுரவித்தார்.

பெண் கல்வி

பின்னர் நீதிபதி எம்.ஜெயச்சந்திரன் பேசும்போது, “பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது தொடர்பாக அதிகமாக விவாதித்து வருகிறோம். சட்டத்தின் துணைகொண்டு நீதிமன்றங்களும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடுகிறது. உரிமைகளை வழங்கும்படி பெண்கள் கோரக்கூடாது. அந்த உரிமைகளை பறித்துக்கொள்ள வேண்டும். பெண் குழந்தைகளுக்கு கல்வியை புகட்டுவதன் மூலமாகவே அதிகாரம் அவர்களுக்கு சென்றடையும்’’ என்றார்.

அமீ யாக்னிக் எம்.பி. பேசும்போது, “ மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது பெண்களுக்கு சாதகமான பல சட்டங்கள் இந்தியாவில் அதிகமாக உள்ளன. ஆனாலும் இங்கு தான் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகளவில் நடக்கிறது. இந்த குற்ற எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவது வருத்தம் அளிக்கிறது. பெண்களின் முன்னேற்றத்துக்கு குரல் கொடுப்பதுடன் நின்று விடாமல் அதற்கான பணிகளையும் முன்னெடுக்க வேண்டும். பாதிக் கப்பட்ட பெண்களுக்கு உதவிட பெண் வழக்கறிஞர்கள் தாமாக முன்வரவேண்டும்” என்றார்.

சட்ட மாணவர்களுக்கான சான் றிதழ்களை தமி்ழ்நாடு பெண் வழக்கறிஞர் சங்கம் சார்பில் வழக்கறிஞர்கள் ஜெயந்திராணி, வேதவல்லிகுமார், தேன்மொழி, கே.அருணா, ஷோபியா ஆகியோர் வழங்கினர். முடிவில், வழக்கறிஞர் ரீட்டா சந்திரசேகர் நன்றி கூறினார்.தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ‘பெண்களின் முன்னேற்றத்துக்கு நீதித் துறையின் பங்கு’ எனும் கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பெண் கொடுமைக்கு எதிராக குரல் கொடுத்து வரும் குஜராத் காங்கிரஸ் எம்.பி. அமீ யாக்னிக்கைப் பாராட்டி கவுரவிக்கிறார் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எம்.ஜெயச்சந்திரன். உடன் தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் கே.சாந்தகுமாரி, அகில இந்திய பெண் வழக்கறிஞர்கள் கூட்டமைப்புத் தலைவர் ப்ரீத்தி ஷா உள்ளிட்டோர். படம்: ம.பிரபு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x