

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சி, வட சென்னை பகுதியில், தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பணிபுரியும் சுமார் 2 ஆயிரம் தற்காலிக தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் திமுக அரசும், சென்னை மாநகராட்சியும், தனியார் நிறுவனம் ஒன்றுக்கு தூய்மைப் பணியை மேற்கொள்வதற்கான ஒப்பந்த ஆணையை வழங்கி உள்ளது.
இதனால், அப்போதைய திமுக ஆட்சியில், சென்னை மாநகராட்சியில் 2007-ம் ஆண்டு முதல் பணியமர்த்தப்பட்ட தூய்மைப் பணியாளர்களின் வேலை கேள்விக் குறியாகி உள்ளது. மேலும், வடசென்னையில் உள்ள மண்டலங்களில் பணிபுரியும் 2 ஆயிரம் பேரும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் வசித்து வருவதாக தெரிகிறது.
சென்னை மாநகராட்சி, வட சென்னை பகுதியில் தூய்மைப் பணியை தனியாருக்கு மாற்ற முனையும் திமுக அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், தற்போது பணிபுரிந்து வரும் தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் தொடர்ந்து பணிபுரிந்திடவும், அவர்களை நிரந்தரப் பணியாளர்களாக நியமனம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும் வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட அதிமுக சார்பில், வரும் 14-ம் தேதி மாலை 4 மணிக்கு, தண்டையார்பேட்டை மண்டல அலுவலகம் முதல் டோல்கேட் வரை மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும்.