

செயின்பறிப்பு திருடனை துணிச்சலாக விரட்டிப்பிடித்த சிறுவனை நேரில் அழைத்துப் பாராட்டிய காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், சிறுவனுக்கு 18 வயது நிறைவடைந்தவுடன் டிவிஎஸ் நிறுவனத்தில் வேலை வாங்கிக் கொடுத்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 17-ம் தேதி அன்று இரவு அண்ணாநகர் ‘D’ பிளாக், 3வது தெருவில், கிளினிக் நடத்தி வரும் டாக்டர்.அமுதா(50) என்பவரிடம் சிகிச்சை பெறுவது போல் வந்த ஒரு நபர், டாக்டரின் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 10 சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு ஓடினார். இதனால் அதிர்ச்சியடைந்த டாக்டர் அமுதா சத்தம் போட்டார்.
இதனால் குற்றவாளி தான் வந்திருந்த இருசக்கர வாகனத்தை விட்டுவிட்டு ஓடும்போது அவ்வழியாக வந்த சிறுவன் சூர்யா(17) தனி நபராக சத்தமிட்டபடியே வெகுதூரம் விரட்டிச் சென்று குற்றவாளியை மடக்கிப் பிடித்தார். பின்னர் காவல்துறை மற்றும் பொதுமக்கள் உதவியுடன் அந்த நபரை பிடித்து அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
10 சவரன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பிய திருடனை விரட்டிச் சென்று பிடித்த சிறுவன் சூர்யா (எ) சூர்யகுமாரை, காவல் ஆணையாளர் ஏ.கே.விசுவநாதன் கடந்த ஏப்.19-ம் தேதி அன்று நேரில் அழைத்து வெகுவாகப் பாராட்டினார். அப்போது மேற்படி சூர்யா (எ) சூர்யகுமார் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனிடம் தனக்கு ஏதாவது தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கி தரும்படி கோரிக்கை வைத்தார்.
அப்போது சூர்யா 17 வயது சிறுவன் என்பதால் எங்கும்வேலை வாங்கித்தரமுடியாது என்பதை உணர்ந்த காவல் ஆணையர் சிறுவன் சூர்யா 18 வயதை கடந்தவுடன் மறக்காமல் டிவிஎஸ் நிறுவனத்தில் சிபாரிசு செய்து ஏசி மெக்கானிக் வேலைக்கு ஏற்பாடு செய்தார்.