Published : 07 Jul 2025 01:15 AM
Last Updated : 07 Jul 2025 01:15 AM
மேட்டூர் / தருமபுரி: மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 58,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் இரவு விநாடிக்கு 51,401 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 40,500 கனஅடியாகவும், மாலை 50,500 கனஅடியாகவும் பதிவானது. அணைக்கு நீர்வரத்து உயர்ந்துள்ள நிலையில், அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு நேற்று காலை 10 மணிக்கு விநாடிக்கு 50,000 கனஅடியாகவும், மாலை 5 மணிக்கு 58,000 கனஅடியாகவும் அதிகரிக்கப்பட்டது. கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் இருந்தது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 57 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. கபினி அணையில் இருந்து வரும் நீரின் அளவு மற்றும் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழையின் அளவு மாறுபடுவதால் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. எனினும், நீர்வரத்து குறிப்பிட்ட அளவுக்கு மேல் உள்ளதால், அருவி மற்றும் ஆறுகளில் குளிக்க விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கிறது. ஒகேனக்கல்லில் காவல், தீயணைப்புத் துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT