Published : 25 Jul 2018 03:53 PM
Last Updated : 25 Jul 2018 03:53 PM

நியூட்ரினோ திட்டத்தை எதிர்க்கக் கோரி கேரள முதல்வர் பினராய் விஜயனுடன் வைகோ சந்திப்பு

 நியூட்ரினோ திட்டத்தை எதிர்க்கக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேரள முதல்வர் பினராய் விஜயனை இன்று சந்தித்தார்.

இந்தச் சந்திப்பு குறித்து மதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “கேரள முதல்வர் பினராய் விஜயனை கேரள அரசு தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று சந்தித்தார்.

தேனி மாவட்டம், பொட்டிப்புரம் அம்பரப்பர் மலையில் மத்திய அரசு அமைக்க முனைந்துள்ள நியூட்ரினோ ஆய்வகம் தமிழ்நாட்டுக்கும், கேரளாவுக்கும் பெரும் நாசத்தை ஏற்படுத்தும். இந்த ஆய்வகத்திலிருந்து இரண்டரை கிலோ மீட்டர் தொலைவில் கேரள மாநிலத்தின் மதிகெட்டான் சோலை தேசியப் பூங்காவும், அதற்கு அருகில் இடுக்கி அணையும் இருக்கின்றது.

நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க 12 லட்சம் டன் பாறைகளை உடைக்க நேரிடும். அப்படி இடிக்கும்போது இடுக்கி அணையிலும், முல்லைப் பெரியாறு அணையிலும் விரிசல்கள் ஏற்பட்டு அணைகள் உடையும் பேராபத்து ஏற்படும். அமெரிக்க அரசின் வற்புறுத்தலால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இத்திட்டத்தைச் செயல்படுத்த எல்லா வழிகளிலும் முயற்சிக்கிறது. அணுக்கழிவுகளைக் கொண்டுவந்து இந்த ஆய்வகத்தில் கொட்டுவதும் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

எதிர்காலத்தில் உலகத்தின் எப்பகுதியில் உள்ள அணு ஆயுதங்களையும் செயல் இழக்கவோ, வெடிக்கவோ செய்வதற்கான திட்டமும் இதில் அடங்கி இருக்கிறது. இத்திட்டத்திற்கு தமிழக மக்களிடம் பெரும் எதிர்ப்பு இருக்கிறது.

கடந்தாண்டு நியூட்ரினோ திட்ட ஆபாயம் குறித்து உங்களிடம் விளக்க மடல் தந்தேன். கேரள அரசினுடைய வனத்துறையும், சுற்றுச்சூழல் துறையும் நியூட்ரினோ திட்டத்திற்கு எவ்வித அனுமதியும் கொடுக்கக் கூடாது என்று வலியுறுத்துவதற்காகவே இன்று இந்தக் கடிதத்தைத் தருகிறேன் என்று வைகோ கூறினார்.

அறிக்கையை முழுமையாக ஆய்வு செய்து தக்க முடிவு எடுப்பேன் என்று பினராயி விஜயன் உறுதி அளித்தார்.

இந்தச் சந்திப்புக்கு முன்னதாக, கேரள மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலாவை அவரது இல்லத்தில் வைகோ சந்தித்து, 2018 செப்டம்பர் 15-ல் ஈரோட்டில் நடைபெற இருக்கும் மதிமுக முப்பெரும் விழா மாநில மாநாட்டில் பங்கேற்க வருமாறு அழைப்புக் கடிதம் தந்தார். அவசியம் கலந்துகொள்வதாக ரமேஷ் சென்னிதலா ஒப்புதல் அளித்தார்.

நியூட்ரினோ திட்ட அபாயம் குறித்த விளக்கக் கடிதத்தை ரமேஷ் சென்னிதலாவிடம் வைகோ தந்தார்.

தற்போது உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் கம்யூனிஸ்ட் தலைவர் அச்சுதானந்தனை சந்திக்காவிடினும், அவரது இல்ல அலுவலகத்தில் நியூட்ரினோ குறித்த கடிதத்தைத் தந்ததோடு, முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி இல்லத்திலும் அக்கடிதத்தை வைகோ சேர்ப்பித்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x