Published : 05 Jul 2025 01:09 AM
Last Updated : 05 Jul 2025 01:09 AM
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் வரும் 10-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழையும், கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
நாளை ஓரிரு இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய மழையும், 7 முதல் 10-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு, நீலகிரி மாவட்டம் நடுவட்டம், விண்ட் வொர்த் எஸ்டேட், தேவாலா ஆகிய இடங்களில் 2 செ.மீ. மழை பெய்துள்ளது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி, கிளன்மார்கன், மேல் பவானி, செருமுள்ளி, பந்தலூர், மேல் கூடலூர், பார்வூட், வூட் பிரையர் எஸ்டேட் ஆகிய இடங்களில் 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT