

சென்னை: கடந்த மே 2-ம் தேதி சென்னை நோக்கி வந்த மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகளின் காரும், சேலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த காரும் உளுந்தூர்பேட்டை பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகின. 2 கார்களும் லேசாக சேத மடைந்தன.
மறுநாள் காட்டாங்கொளத்தூரில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஆதீனம், மாற்று மதத்தை சேர்ந்த சிலர் தன்னை கார் ஏற்றி கொல்ல முயன்றதாக குற்றம்சாட்டினார். இதற்கு காவல் துறை மறுப்பு தெரிவித்தது.
இந்த நிலையில், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ராஜேந்திரன் அளித்த புகாரின்பேரில், இரு சமூகத்தினர் இடையே பகைமையை ஏற்படுத்துதல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் மதுரை ஆதீனம் மீது சென்னை கிழக்கு மண்டல சைபர் க்ரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ஆதீனத்துக்கு சைபர் க்ரைம் போலீஸார் கடந்த 30-ம் தேதி சம்மன் அனுப்பினர். ஆனால், அவர் ஆஜராகவில்லை.
இந்நிலையில், சென்னை சேத்துப்பட்டு காவல் நிலைய வளாகத்தில் உள்ள சென்னை கிழக்கு மண்டல சைபர் க்ரைம் அலுவலகத்தில் வரும் 5-ம் தேதி ஆஜராகுமாறு மதுரை ஆதீனத்துக்கு 2-வது முறையாக போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர்.