Last Updated : 29 Jul, 2018 11:59 PM

 

Published : 29 Jul 2018 11:59 PM
Last Updated : 29 Jul 2018 11:59 PM

விளம்பரம் இல்லாததால் ‘நீரா’ பானத்தின் விற்பனை மந்தம்: செலவு அதிகரிப்பால் திணறும் உற்பத்தியாளர்கள்

விளம்பரம் இல்லாததால் ‘நீரா’பானத்தின்  விற்பனை மந்தமாக உள்ளது.  இதற்கான உற்பத்தி செலவு அதிகரித்து வருவதால் உற்பத்தியாளர்கள் திணறி வருகிறார்கள்.

 நீரா என்பது பதநீருக்கும் கள்ளுக்கும் இடைப்பட்ட பானமாகும்.  தென்னம்பாளையை சீவிஅதிலிருந்து வடியும்  நீராவை (பதநீர்) உள்பகுதியில் சுண்ணாம்பு பூசப்பட்ட மண் கலயத்தில் சேகரித்து, மரத்தில் இருந்து இறக்கியதும் ப்ரீஸர் பொருத்தப்பட்ட வேனில் ஏற்றி, குளிரூட்டும் மையத்துக்கு  எடுத்துச் செல்கின்றனர். அங்கு பாட்டில்களில் அடைத்து விற்கின்றனர்.  200 மில்லி லிட்டர் கொண்ட ஒரு பாட்டில் நீரா பானம் ரூ.20-க்கு விற்கப்படுகிறது.

தற்போது பொள்ளாச்சி, கோவை, புதுக்கோட்டையைச் சேர்ந்த 3  நிறுவனங்களுக்கு நீரா பானம் உற்பத்தி செய்து விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தென்னிந்திய தென்னை சாகுபடியாளர்கள் சங்கத் தலைவர் டி.ஏ.கிருஷ்ணசாமி கவுண்டர் கூறியதாவது:

நீரா பானம் தற்போது பொள்ளாச்சியில் 3 இடங்களிலும்,  கோவையில் 2 இடங்களிலும் விற்கப்படுகிறது. அரசு விழாக்களிலும் ஆங்காங்கே விற்கிறார்கள்.

தற்போது பாட்டிலில் அடைத்து விற்கப்படும் நீரா பானம் 2  மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். அதுவே டெட்ரா பேக்கில் அடைத்து விற்றால் 6 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். டெட்ரா பேக் தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்க ரூ.10 கோடி வரை செலவாகும். எனவே, இதனை அரசுதான் தொடங்க முடியும். ஏற்கெனவே பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டி கிராமத்தில் அரசு நிலத்தில் டெட்ரா பேக் தொழிற்சாலை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதனை உடனடியாகத் தொடங்க வேண்டும்.  நீரா பானம் தயாரிப்பதற்கு  ஐஸ் கட்டிகள் தேவைப்படுவதால் ஐஸ் பேக்டரியையும் அரசு பெரியளவில் தொடங்க வேண்டும்.

தென்னை மரம் ஏறுவதற்கு ஆட்கள் கிடைக்கவில்லை. மரம் ஏற வருபவர்களும் அதிக கூலி கேட்பதால் உற்பத்திச் செலவு அதிகரிக்கிறது.  நீரா பானம் இயற்கையான சத்தான பானம். அதில், ஏராளமான வைட்டமின்கள் உள்ளன என்று பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் அரசு விளம்பரம் செய்தால் மட்டுமே நீரா விற்பனை சூடுபிடிக்கும்.

இவ்வாறு  கிருஷ்ணசாமி கூறினார்.

தமிழக கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி கூறியதாவது:

100 மரங்கள் இருந்தால் அவற்றில் 5 மரத்தில் (5 சதவீதம்) மட்டும் நீரா பானம் இறக்க வேண்டும். தனிப்பட்ட விவசாயி நீரா பானம் இறக்கி விற்கக்கூடாது. நிறுவனம் அல்லது கூட்டுறவு அமைப்பு மூலமாகத்தான் நீரா பானம் விற்பனை செய்ய வேண்டும் என்பது போன்ற கடும் நிபந்தனைகளால் நீரா பானத்தின்  உற்பத்தி குறைவாக உள்ளது. எனவே, நீரா பானத்தை தனிப்பட்ட விவசாயி இறக்கி பருகவும், விற்கவும், மதிப்பு கூட்டிய பொருட்களாக தயாரித்து விற்கவும் அனுமதி அளித்தால் மட்டுமே நீரா பானத்தின்  உற்பத்தி கணிசமாக அதிகரிக்கும். நீரா பானத்துக்கு வெளிநாடுகளில் கிராக்கி இருப்பதால் கூடுதலாக நீரா உற்பத்தி செய்து அந்நிய செலாவணி ஈட்டுவதற்கு அரசு ஆவன செய்ய வேண்டும்.இவ்வாறு  நல்லசாமி கூறினார்.

 இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறும்போது, “தனிப்பட்ட தென்னை விவசாயி நீரா பானம் தயாரிக்க அனுமதித்தால் கலப்படம் உருவாகும் என்பதால் அனுமதி அளிக்கவில்லை. நிறுவனம் தயாரிக்கும்போது கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டால் அந்த நிறுவனத்தைப் பொறுப்பேற்கச் செய்ய முடியும். விளம்பரம் மூலம் நீராபானம் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x