Published : 02 Jul 2025 05:30 AM
Last Updated : 02 Jul 2025 05:30 AM
சென்னை: டாஸ்மாக் மதுபானக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் பணிக்கு தனியாக பணியாளர்களை நியமிப்பது தொடர்பாக அரசின் பிரத்யேக குழுவை அணுகலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசுவைக் கருத்தில் கொண்டு டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விற்கப்படும் மது பாட்டில்களை திரும்பப்பெற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி மதுபாட்டில்களை விற்கும்போது ரூ.10 கூடுதலாக பெற்றுக்கொண்டு, காலி பாட்டில்களை ஒப்படைத்தால், அந்த ரூ.10 திருப்பிக் கொடுக்கப்படும். இத்திட்டம் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளுக்கு டாஸ்மாக் கடைகளில் தற்போது பணியாற்றும் ஊழியர்களை நியமிக்காமல், தனியாக பணியாளர்களை நியமிக்கக் கோரியும், காலி மதுபாட்டில்களை சேகரித்து வைக்க தனி இடம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தரக் கோரியும், டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், ” காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் தொடர்பாக ஊழியர்களின் குறைகளைக் கேட்டு ஆய்வு செய்ய டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
எனவே மனுதாரர் சங்கம், அந்தக் குழுவை அணுகலாம்” என்றார். அதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் பணிக்கு தனியாக ஊழியர்களை நியமிப்பது தொடர்பாக மனுதாரர் சங்கம் அரசு நியமித்துள்ள பிரத்யேக குழுவை அணுகலாம்” என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT