Published : 15 Jul 2018 02:01 PM
Last Updated : 15 Jul 2018 02:01 PM

லதா ரஜினிகாந்துக்கு எதிராக அவதூறு செய்திகளைப் பரப்ப வேண்டாம்: மீடியா ஒன் நிறுவனம்

அட்-ப்யூரோ நிறுவனத்தின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நம்பி லதா ரஜினிகாந்துக்கு எதிராக அவதூறு செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்று மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவன இயக்குநர் திமோதி மோசஸ் வெளியிட்ட விளக்க அறிக்கையில், ''தற்போது மீடியா ஒன் குளோபல் என்டர்டேயின்மென்ட் நிறுவனம், லதா ரஜினிகாந்த் மற்றும் அட்-ப்யூரோ விளம்பர நிறுவனத்திற்கும் இடையிலான சர்ச்சைகள் பற்றி ஊடகங்களில் பல தவறான மற்றும் ஆதாரமற்ற செய்திகள் வெளியாவது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது.

இந்த சர்ச்சைகள் அனைத்தும் மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மற்றும் அட்-ப்யூரோ விளம்பர நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கைகள் (MOU) மூலம் தொடங்கியது. அந்த உடன்படிக்கைகளின் படி அட்-ப்யூரோ விளம்பர நிறுவனத்திடமிருந்து கடன் தொகையாக ரூ.20 கோடி மீடியா ஒன் நிறுவனம் பெற்றுக்கொண்டது. ரஜினிகாந்த் நடித்த, ‘கோச்சடையான்’ திரைப்படத்திற்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்காக அத்தொகையை மீடியா ஒன் நிறுவனம் கடனாக வாங்கியது. மேலே கூறப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கைகளின் கீழ் லதா ரஜினிகாந்த் உறுப்பினர் இல்லை.

மேலும் இந்த உடன்படிக்கைகளின் படி அட்-ப்யூரோ விளம்பர நிறுவனத்திற்கு ’கோச்சடையான்’ திரைப்படத்தை தமிழ்நாட்டில் மட்டும் விநியோகிப்பதற்கான முழு உரிமையும், உடன் குறைந்தபட்ச உத்தரவாத லாபத்தை கடன் தொகைக்கு ஈடாக எடுத்துக்கொள்ளவும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. உடன்படிக்கைகளின் படி நிர்ணயிக்கப்பட்ட ரூ.20 கோடியில் ரூ.10 கோடி மட்டுமே முன்பணமாக கொடுத்தது அட்-ப்யூரோ நிறுவனம். இதன் காரணமாக ‘கோச்சடையான்’ திரைப்படம் வெளியாவதில் பல வாரங்கள் தாமதமானது. இன்றைய தேதிப்படி மீடியா ஒன் நிறுவனம் ரூ.10 கோடி கடன் தொகையில், ரூ.9.2 கோடி உடன்படிக்கைகளின் படி சரிவர கட்டியுள்ளது. மேலும் ரூ.80 லட்சத்தை உடன்படிக்கைகளின் படி கட்ட முடிக்கவும் உறுதியாய் உள்ளது.

உடன்படிக்கைகளின் ஒப்பந்த மீறலாய், அட்-ப்யூரோ நிறுவனம் கடிதம் வழி கடந்த 11.11.2014 அன்று கோரியது. மீடியா ஒன் நிறுவனம் மொத்த தொகையாக ரூ.10 கோடியும், வட்டியாக ரூ.4.30 கோடியும், 6 மாத கால கணக்கின்படி, ஓராண்டிற்கான 80% வட்டி விகிதத்தை கட்டுமாறு கோரப்பட்டது. இது உடன்படிக்கைகளின் கீழ் ஒவ்வாத கோரிக்கை மட்டுமின்றி விதிமீறலாகும். இது தொடர்பாக காவல் ஆணையரிடம் புகார் ஒன்றும் கொடுக்கப்பட்டு, விசாரணையில் உள்ளது.

இதன் தொடர்ச்சியாக, அட்-ப்யூரோ நிறுவனம், மீடியா ஒன் நிறுவனம் மற்றும் லதா ரஜினிகாந்துக்கு எதிராக அவதூறு பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளது. மேலும் அட்-ப்யூரோ நிறுவனம் பொது வழக்குகளை தொடர்ந்துள்ளது. மேலும் மீடியா ஒன் நிறுவனம் மற்றும் லதா ரஜினிகாந்த் மீது பொய்யாய் புனையப்பட்ட மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் கீழ் புகார் கொடுத்துள்ளது.

லதா ரஜினிகாந்த் மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் பங்குதாரரோ நிர்வாக இயக்குனரோ இல்லை. மேலும் அட்-ப்யூரோ நிறுவனத்தின் கோரிக்கைக்கு மீடியா ஒன் நிறுவனம் மட்டுமே பொறுப்பாகும் என்பது தெளிவுபடுத்தபடுகிறது. மீடியா ஒன் நிறுவன விவகாரங்களில் லதா ரஜினிகாந்துக்கு எந்தப் பங்கும் இல்லை. மேலும் அட்-ப்யூரோ நிறுவனத்தின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நம்பி லதா ரஜினிகாந்துக்கு எதிராக அவதூறு செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்று அனைத்து ஊடகங்களையும் பணிவன்புடன் கேட்டு கொள்கிறோம்.

மேல் குறிப்பிட்டுள்ளபடி, மீடியா ஒன் நிறுவனம் மற்றும் லதா ரஜினிகாந்தின் நற்பெயருக்கு அவதூறு விளைவிக்கவும், பணம் பறிக்கவும் அட்-ப்யூரோ நிறுவனம் இத்தகைய செயல்களில் ஈடுப்பட்டு வருவது தெளிவாகிறது'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x