Published : 28 Jun 2025 05:35 AM
Last Updated : 28 Jun 2025 05:35 AM

பேருந்துகளில் சாகசத்துக்காக படிக்கட்டில் பயணிக்கும் மாணவர்கள் மீது வழக்கு: போலீஸாருக்கு கோர்ட் உத்தரவு

கோப்புப் படம்

மதுரை: பேருந்துகளில் சாகசத்துக்காக படிக்கட்டில் நின்றும், தொங்கியபடியும் பயணம் செய்யும் மாணவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், அரசு ஐடிஐ, பாலிடெக்னிக் மற்றும் அரசுக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம்.

இதற்காக 2024-25-ம் கல்வியாண்டில் 23,49,616 பள்ளி மாணவர்களுக்கும், சுமார் 2 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் பொதுப் பேருந்துகளில் புத்தகப்பை, உணவுப் பைகளுடன் செல்லும்போது, கூட்ட நெருக்கடியில் சிக்கி சிரமப்படுகின்றனர்.

இதனால் மாணவ, மாணவிகள் பேருந்து படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்கின்றனர். இவ்வாறு பயணம் செய்யும்போது சில நேரங்களில் விபத்துகளில் சிக்கி மாணவ, மாணவிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் நடைபெறுகின்றன.

எனவே, அரசுப் பேருந்துகளில் இலவச பாஸை பயன்படுத்தி பயணிக்கும் மாணவ, மாணவிகள் பாதுகாப்பாக பயணம் செய்வதை உறுதி செய்யும் வகையில் பள்ளி, கல்லூரி நேரங்களில் மாணவ, மாணவிகளுக்காக மட்டும் தனி பேருந்துகள் இயக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரிய கிளாட் அமர்வு விசாரித்து, "பிள்ளைகளை சிறப்பாக வளர்ப்பதில் பெற்றோருக்கு அதிக கடமை உள்ளது. தற்போது பள்ளிப் பருவத்திலேயே மாணவர்கள் புகை, மது, கஞ்சா உள்ளிட்ட பழக்கங்களுக்கு உள்ளாகி வருவது அதிகமாக உள்ளது. மாணவிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கும் அளவில் நிலைமை உள்ளது.

பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டுகளில் பயணம் செய்வது தொடர்பாக ஏராளமான புகார்கள் வருகின்றன. ஓட்டுநர், நடத்துனர் அறிவுறுத்தினாலும், மாணவர்கள் அதை ஏற்காமல் சாகசம் என்று கருதி, படிக்கட்டில் பயணம் செய்து விபத்தில் சிக்குகின்றனர். படிக்கட்டுகளில் பயணம் செய்வது மோட்டார் வாகன விதியின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

படிக்கட்டில் பயணிப்பவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்யலாம். எனவே, பயணத்தின்போது மாணவர்கள் பேருந்துக்குள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இதையும் மீறி சாகசத்துக்காக படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மனு முடிக்கப்படுகிறது" என்று உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x