Published : 28 Jun 2025 04:57 AM
Last Updated : 28 Jun 2025 04:57 AM

பொது இடங்களில் மது அருந்துவதை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்

சென்னை: பொது இடங்களில் மது அருந்துவதை தடுக்க அனைத்து ஊர்களிலும் காவல்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என தமிழக அரசை தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள காரத்தொழுவு அரசு உயர்நிலைப் பள்ளி அருகே, மது அருந்திய கும்பலைத் தட்டிக்கேட்ட அரசுப் பள்ளி ஆசிரியர் குலாம் தஸ்தகீர் மீது போதைக் கும்பல் பெட்ரோல் ஊற்றி தாக்குதல் நடத்தியிருக்கிறது.

பொது இடங்களில் மது அருந்துபவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மது விற்பனையில் பணம் வந்தால் போதும் என்ற திமுக அரசின் கட்டுப்பாடற்ற மது விற்பனையின் விளைவு, அரசுப் பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தும் அளவுக்குச் சென்றிருக்கிறது.

அரசு அதிகாரிகள், காவல்துறையினர், பெண்கள், குழந்தைகள், முதியோர் என திமுக ஆட்சியின் கையாலாகா தனத்தால் யாருக்குமே பாதுகாப்பில்லை. அரசுப் பள்ளியின் உள்ளே நுழைந்து, ஆசிரியர் மீது பெட்ரோல் ஊற்றி தாக்குதல் நடத்த முடிகிறது என்றால், திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கு குப்பைக் கிடங்குக்கு சென்று விட்டது என்பதுதான் பொருள்.

ஆனால், இது எவை குறித்தும் கவலை இல்லாமல், நாளொரு வேஷமும், பொழுதொரு நாடகமும் நடத்திக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின் முழுநேரமாக நடிக்கச் செல்லலாம். ஆசிரியர் மீதான பெட்ரோல் தாக்குதல், கொலை முயற்சியாகவே கருதப்பட வேண்டும்.

உடனடியாக, அந்த சமூக விரோதிகளை கைது செய்து கடும் நடவடிக்கை எடுப்பதோடு, பொது இடங்களில் மது அருந்தப்படுவதைத் தடுக்க, ஒவ்வொரு ஊரிலும் காவல்துறை கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x