கோப்புப்படம்
கோப்புப்படம்

ரேஷன் பொருட்கள் எடைப் பிரச்சினை வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

Published on

சென்னை: ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்யும் பொருட்களை கடைகளில் வைத்து எடை போட்டு விற்பனை முனைய கருவியில் பதிவு செய்ய உத்தரவிட கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், “தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் தாக்கல் செய்த மனுவில், உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நாட்டின் எந்த பகுதிகளில் இருந்தாலும் நியாய விலை கடைகளில் உணவு பொருட்களை வாங்க முடியும். இதற்காக அனைத்து நியாய விலை கடைகளிலும் மின்னணு விற்பனை முனைய கருவி பொருத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை மேம்படுத்தும் வகையில் உணவு பொருள் விநியோகத்தில் உள்ள குறைபாடுகளை களையவும், சரியான எடையில் பொருட்களை வழங்க மின்னணு விற்பனை கருவியுடன், மின்னணு எடை தராசை இணைக்க வேண்டுமென அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் உத்தரவு பிறப்பித்தது. இதன்படி, ரேஷன் கடைகளில் உள்ள மின்னணு விற்பனை கருவியுடன் மின்னணு எடை தராசுகளை இணைக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த புதிய நடைமுறைப்படி பொருட்கள் முதலில் அளவீடு செய்த பிறகுதான் பில் போடபட வேண்டும். இதனால் ஒரு நாளைக்கு 20 ரேஷன் கார்டுகளுக்கு மட்டுமே பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது. பொருட்கள் எடை குறைவதை தடுக்கும் வகையில் புதிய நடைமுறை அமலப்படுத்தப்பட்ட போதிலும், ரேஷன் கடைகளுக்கு பொருட்களை கொண்டு வரும் போதே ஒரு சாக்குக்கு ஒன்று முதல் ஒன்றரை கிலோ எடை குறைவாகவே உள்ளது.

இதனால், எந்த ஒரு தவறும் செய்யாத ரேஷன் கடை ஊழியர்கள் தங்கள் ஊதியத்தில் ஒரு குறிப்பிடதக்க பகுதியை இழந்து வருகிறார்கள். எனவே, ரேஷன் கடைகளுக்கு கொண்டு வரப்படும் உணவு பொருட்களை கடைகளில் வைத்து எடை பார்த்து அதனை விற்பனை முனைய கருவியில் பதிவு செய்ய வேண்டும் என அரசுக்கு உத்தரவிட வேண்டும்,” என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (ஜூன் 26) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு மத்திய மாநில அரசுகள் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in