மது அருந்திவிட்டு ஆபாச நடனமாடிய 4 அர்ச்சகர்கள் மீது அறநிலையத் துறை நடவடிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் பெண் பணியாளர் முகத்தில் அர்ச்சகர் விபூதி அடித்து விளையாடுவதாக சமூக வலைதளங்களில் பரவும் காட்சி. (அடுத்த படம்) கோயில் அலுவலகத்தில் அறநிலையத் துறை ஊழியர் கார்த்திக், மது பாட்டிலுடன் இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவும் காட்சி.
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் பெண் பணியாளர் முகத்தில் அர்ச்சகர் விபூதி அடித்து விளையாடுவதாக சமூக வலைதளங்களில் பரவும் காட்சி. (அடுத்த படம்) கோயில் அலுவலகத்தில் அறநிலையத் துறை ஊழியர் கார்த்திக், மது பாட்டிலுடன் இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவும் காட்சி.
Updated on
1 min read

ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கோயில் கும்பாபிஷேக பணிக்கு வந்த அர்ச்சகர்கள் 4 பேர் மது அருந்திவிட்டு ஆபாச நடனமாடிய வீடியோ வெளியானது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட அர்ச்சகர்கள் மீது அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து சமய அறநிலையத் துறையின் பராமரிப்பில் உள்ள பெரிய மாரியம்மன் கோயிலில் வரும் ஜூலை 2-ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 16-ம் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டு, கும்பாபிஷேகப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இக்கோயிலில் உதவி அர்ச்சகராகப் பணிபுரிபவர் கோமதிவிநாயகம் (30). இவரது வீட்டில், கும்பாபிஷேக பணிக்கு வந்த அர்ச்சகர்கள் சிலர் தங்கியுள்ளனர். இவர்களில் சிலர் மது குடித்துவிட்டு வீட்டில் ஆபாசமாக நடனமாடியதாகக் கூறப்படுகிறது. இதை வீடியோ எடுத்த கோயில் முன்னாள் அர்ச்சகர் ஹரிஹரன் மகன் சபரிநாதன், அதை அறநிலையத் துறை அதிகாரிகள், கோயில் நிர்வாகக் குழுவினருக்கு அனுப்பிவைத்து, புகார் தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்கிலும் வைரலாகப் பரவியது.

இதுதவிர, கோயில் வளாகத்தில் பணிபுரியும் பெண்கள் மீது விபூதி அடித்து அர்ச்சகர்கள் விளையாடும் வீடியோவும் வெளியாகி உள்ளது. இதையடுத்து, தங்களை பற்றி அவதூறாக வீடியோ வெளியிட்டதாக சபரிநாதன் மீது காவல் நிலையத்தில் கோமதிவிநாயகம் புகார் அளித்தார். அதேநேரம், ஆபாச நடனமாடிய அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து முன்னணி சார்பில் தக்காரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

கடந்த 15-ம் தேதி பெரிய மாரியம்மன் கோயில் அர்ச்சகர் சுந்தர் மது அருந்திவிட்டு பணியில் ஈடுபட்டதும் மருத்துவப் பரிசோதனை மூலம் உறுதியானது. அர்ச்சகர் கோமதிவிநாயகம் மற்றும் 3 உதவி அர்ச்சகர்கள் மது போதையில் ஆபாச நடனமாடும் வீடியோ வெளியானது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து, பெரிய மாரியம்மன் கோயில் தக்காரும், ஆண்டாள் கோயில் செயல் அலுவலருமான சக்கரையம்மாள், செயல் அலுவலர் ஜோதிலட்சுமி ஆகியோர், சர்ச்சையில் சிக்கிய அர்ச்சகர்களிடம் நேற்று விசாரணை மேற்கொண்டனர்.

இதுகுறித்து தக்கார் சர்க்கரையம்மாள் கூறும்போது, "உதவி அர்ச்சகர் கோமதிவிநாயகம் உள்ளிட்ட 4 பேரும் கோயிலில் இருந்து நீக்கப்பட்டு விட்டனர். அவர்கள் கோயில் பூஜை விவகாரங்களில் தலையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. அர்ச்சகர் சுந்தர் மீது கும்பாபிஷேகத்துக்குப் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும். துறை ரீதியிலான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என்றார்.

இதனிடையே, ஆபாசமாக நடனமாடியதாக சர்ச்சையில் சிக்கிய அர்ச்சகர்கள், விசாரணை முடிந்து ஆண்டாள் கோயில் வாயிலுக்கு வந்தபோது, அவர்களை காளிராஜ் உள்ளிட்ட சில பக்தர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக மேட்டுத் தெருவை சேர்ந்த காளிராஜ் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in