அனுமதியற்ற விடுப்புக்கு நிர்வாகம் ஊதியம் வழங்கினால் தொழிலாளர் மீது மோசடி குற்றச்சாட்டு கூற முடியாது: ஐகோர்ட்

அனுமதியற்ற விடுப்புக்கு நிர்வாகம் ஊதியம் வழங்கினால் தொழிலாளர் மீது மோசடி குற்றச்சாட்டு கூற முடியாது: ஐகோர்ட்
Updated on
1 min read

சென்னை: அனுமதியின்றி எடுத்த விடுப்புக்கு நிர்வாகம் ஊதியம் வழங்கினால், அதற்கு தொழிலாளர் மீது மோசடி குற்றச்சாட்டு கூற முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் நாகப்பட்டினம் கிளை மேலாளராக பணியாற்றியவர் இளங்கோவன். இவர் கடந்த 2006 முதல் 2008 வரை 117 நாட்கள் விடுப்பு எடுத்து சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளுக்கு ஏழு முறை பயணம் செய்துள்ளார். முன்அனுமதி பெறாமல் விடுப்பு எடுத்ததுடன் ஒரு லட்சத்து 2,916 ரூபாய் ஊதியமாக பெற்று நிறுவனத்துக்கு இழப்பு ஏற்படுத்தியதாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம், இளங்கோவனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து இளங்கோவன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் இளங்கோவன் விடுப்பு கோரி விண்ணப்பித்துள்ளதால், அதனை அனுமதியின்றி விடுப்பு எடுத்ததாக கருத முடியாது. நிர்வாகம் ஊதியம் வழங்கினால் அதற்கு தொழிலாளர் மீது மோசடி குற்றச்சாட்டு கூற முடியாது எனக்கூறி, இளங்கோவனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

உயர் அதிகாரியின் அனுமதி இல்லாமல் வெளிநாடு பயணம் சென்றிருந்தால் அதற்கு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம். அதை விடுத்து மோசடி குற்றச்சாட்டு கூற முடியாது என்று நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in