Published : 24 Jun 2025 05:24 AM
Last Updated : 24 Jun 2025 05:24 AM
சென்னை: ஆப்பிரிக்க இளைஞர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னையில் போதைப் பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையை தடுக்க அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களுடன் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு பிரிவு போலீஸாரும் ஒருகிணைந்து செயல்படுகின்றனர்.
இந்நிலையில், கடந்த 17-ம் தேதி இரவு சந்தேகத்தின்பேரில் இளைஞர் ஒருவரை பிடித்து நுங்கம்பாக்கம் போலீஸார் விசாரித்தனர். அவர் வைத்திருந்த பையில் 11 கிராம் போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த போலீஸார், இதை வைத்திருந்த சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்த பிரதீப் குமார் என்ற பிரடோவை (38) கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில், அவருக்கு போதைப்பொருள் விநியோகத்ததாக மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவைச் சேர்ந்த ஜான் (38) என்பவரை ஓசூரில் கடந்த 18-ம் தேதி கைது செய்தனர். அவரை சென்னை அழைத்து வந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர் யாருக்கெல்லாம் போதைப்பொருளை விநியோகம் செய்தார் என்ற பட்டியலை கொடுத்தார். அந்த பட்டியலில் தமிழ் நடிகர் ஸ்ரீகாந்தும் இடம்பெற்றிருந்தார்.
இதையடுத்து நுங்கம்பாக்கம் போலீஸார் ஸ்ரீகாந்தை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்து நேற்று, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது, தான் போதைப்பொருளை பயன்படுத்தியது கிடையாது என்று ஸ்ரீகாந்த் வாதம் செய்துள்ளார். இருப்பினும் அவரது வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர். ஆனால், எதுவும் சிக்கவில்லை.
இதையடுத்து ஸ்ரீகாந்தின் ரத்த மாதிரி பரிசோதிக்கப்பட்டது. இதில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வகை போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தால் 45 நாட்கள் வரை இந்த பரிசோதனையில் கண்டறியலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து ஸ்ரீகாந்தை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்ரீகாந்த் மட்டும் அல்லாமல் திரை பிரபலங்கள் பலரும் போதைப் பொருளை பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுகுறித்தும் போலீஸார் விசாரணையில் இறங்கி உள்ளனர்.
2002-ம் ஆண்டு வெளியான ‘ரோஜாக்கூட்டம்' திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான ஸ்ரீகாந்த், அடுத்தடுத்து ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், பார்த்திபன் கனவு, பம்பர கண்ணாலே, நண்பன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கி அவர் கைது செய்யப்பட்டிருப்பது, அவரது ரசிகர்கள் மட்டும் அல்லாமல் சினிமா வட்டாரத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT