திமுக அரசுக்கு எதிராக வாக்களிக்க தயங்க மாட்டோம்: ஆசிரியர் சங்க தலைவர் அறிவிப்பு

அ.மாயவன்
அ.மாயவன்
Updated on
1 min read

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அரசுக்கு எதிராக மாறி வாக்களிக்க தயங்க மாட்டோம் என, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனத் தலைவர் அ.மாயவன் தெரிவித்தார்.

தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் முப்பெரும் விழா நேற்று திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நிறுவனத் தலைவர் மாயவன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாங்கள் அரசுக்கு எதிரானவர்கள் அல்ல. எதிர்க்கட்சியாக இருக்கும் போது திமுக கொடுத்த வாக்குறுதியில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைய வேண்டும் என்று எந்த சங்கமும் முன்னெடுக்காத ஒரு பணியை நாங்கள் செய்தோம்.

எங்களை ஏமாற்றும் திமுக அரசை இனி நாங்கள் நம்புவதற்கு தயாராக இல்லை. விரைவில் பொதுக்குழுவை கூட்டி போராட்டங்கள் அறிவிக்கப் படும். கடந்த நான்கரை ஆண்டுகளாக செய்யாத திட்டங்களை இனி அவர்களால் செய்ய முடியாது. சிறை நிரப்பும் போராட்டம் உட்பட பல போராட்டங்கள் நடத்தப்படும்.

திமுக அரசை விரைவில் பணிய வைப்போம். அதற்காக அஞ்சமாட்டோம். எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் தாங்குவோம். ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், அரசுக்கு எதிராக மாறி வாக்களிக்கவும் தயங்கமாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in