

தருமபுரி: கர்நாடக மாநில அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை வந்தடைந்த நிலையில் நீர்வரத்து 17 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது.
கர்நாடக மாநிலம் கபினி அணையில் இருந்து கடந்த 17-ம் தேதி விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் காவிரியாற்றில் திறந்து விடப்பட்டது. 18-ம் தேதி பிற்பகலில் இந்த நீரின் அளவு விநாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு 19-ம் தேதி இரவு இந்த நீர் வந்தடைந்தது. அன்றிரவு 10 மணியளவில் நீர்வரத்து விநாடிக்கு 8,000 கனஅடியாக பதிவானது.
இந்நிலையில், இன்று காலை அளவீட்டின்போது நீர்வரத்து விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. மாலை 3 மணியளவில் விநாடிக்கு 17 ஆயிரம் கனஅடி என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது. இதனால், ஒகேனக்கல் பிரதான அருவி, சினி பால்ஸ், ஐவர்பாணி என்று அழைக்கப்படும் ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
நீர்வரத்து உயர்வு காரணமாக ஒகேனக்கல் பிரதான அருவியில் குளிக்க மாவட்ட ஆட்சியர் சதீஸ் தடை அறிவித்துள்ளார். காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்வதால் கர்நாடக மாநில அணைகளில் நீர்திறப்பு அதிகரிக்கப்படும் என்றும், ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தின் அளவு உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.