அன்புமணி நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும்: ராமதாஸ் திட்டவட்டம்

அன்புமணி நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும்: ராமதாஸ் திட்டவட்டம்
Updated on
1 min read

சென்னை: பாமகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு திமுகதான் காரணம் என அன்புமணி கூறியது அப்பட்டமான, கடைந்தெடுத்த பொய் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக-வில் கடந்த சில மாதங்களாகவே, கட்சி அதிகாரத்தில் நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. இதையடுத்து, மாவட்ட வாரியாக கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை அன்புமணி நடத்தி வருகிறார். காஞ்சிபுரத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அன்புமணி, பாமகவில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு திமுகதான் காரணம் என குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி, எம்எல்ஏ அருள் ஆகியோரை நலம் விசாரிக்க கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நேற்று சென்னை வந்தார். அப்போது அவரிடம், பாமக பிரச்சினையில் திமுக தலையிடுகிறது என அன்புமணி விமர்சித்துள்ளாரே என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த ராமதாஸ், ‘‘இது அப்பட்டமான பொய். கடைந்தெடுத்த பொய்’’ என்றார்.

தொடர்ந்து அவர் கூறியதாவது: அன்புமணி கூட்டத்தை கூட்டும் நேரத்தில் எம்எல்ஏக்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போயிருக்கலாம். அவர்கள் உடல் பரிசோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர். கட்சிப்பணியை பொறுத்தவரை அன்புமணி உட்பட அவரவர் வேலைகளை அவரவர் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மன்னிப்பு கேட்கத் தயாராக இருப்பதாக கூறும் அன்புமணி, நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும். இதுபற்றி போகப் போகத் தெரியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in