Published : 17 Jun 2025 08:18 PM
Last Updated : 17 Jun 2025 08:18 PM
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்க மறுத்த உயர் நீதிமன்றம், ஜூன் 21 காலை 10 மணி வரை வாகன பாஸ் கேட்டு விண்ணப்பிக்கலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை வண்டியூரை சேர்ந்த அரசு பாண்டி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: மதுரை வண்டியூர் அருகே அம்மா திடலில் ஜூன் 22-ல் முருக பக்தர்கள் ஆன்மிக மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கு அனுமதி வழங்கும்போது காவல்துறை 50-க்கும் மேற்பட்ட நிபந்தனைகளை விதித்துள்ளது.
இந்த மாநாட்டுக்கு வருவோர் அந்தந்த உட்கோட்ட டிஎஸ்பியிடம் வாகன பாஸ் பெற வேண்டும் என்பது நிபந்தனைகளில் ஒன்றாகும். இந்த நிபந்தனையை மாநாட்டில் கலந்துகொள்ள வாகன பாஸ் கோரி விண்ணப்பித்தால் 24 மணி நேரத்தில் முடிவெடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கொடைக்கானல், ஊட்டி போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வாகனங்களுக்கு ஆன்லைன் வழியாக இ-பாஸ் வழங்கப்படுகிறது. இந்த முறையை முருக பக்தர் மாநாட்டுக்கு வரும் வாகனங்களுக்கும் பின்பற்றினால் பாஸ் பெறுவது எளிதாக இருக்கும். இதனால் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வரும் வாகனங்களுக்கு ஆன்லைன் வழியாக இ-பாஸ் வழங்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி புகழேந்தி விசாரித்தார். பின்னர் நீதிபதி, முருக பக்தர்கள் மாநாட்டுக்கு ஆன்லைன் முறையில் பாஸ் வழங்க முடியாது. ஜூன் 21 காலை 10 மணி வரை முருகன் பக்தர்கள் மாநாட்டுக்கு வாகன பாஸ் கேட்டு விண்ணப்பிக்கலாம். மனு முடிக்கப்படுகிறது என உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT