Published : 17 Jun 2025 03:08 PM
Last Updated : 17 Jun 2025 03:08 PM

“ராமர் பாலம், சரஸ்வதி நதி குறித்த அறிவியல் சான்று உள்ளதா?” - கீழடி விவகாரத்தில் ஜோதிமணி கேள்வி

திண்டுக்கல்: “ராமர் பாலம், சரஸ்வதி நதி ஆகியவை குறித்த அறிவியல் சான்று, வரலாற்று சான்று உள்ளதா? இவர்கள் அரசியல் காரணங்களுக்காக வாயில் வந்ததையெல்லாம் சொன்னால் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், தமிழுக்கு இருக்கும் தொன்மையை இவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்” என கரூர் எம்.பி. ஜோதிமணி தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கரூர் எம்.பி. ஜோதிமணி திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் கூறியது: “கீழடியில் எப்பொழுதெல்லாம் நமது தொன்மை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் மத்திய அரசு, இது சரியில்லை, அது சரியில்லை, அறிவியல் பூர்வ ஆராய்ச்சி இல்லை என்கின்றனர்.

இரும்பு காலத்தில் தமிழர்கள்தான் முதன்மையானவர்கள் என நிரூபித்துள்ளோம். கீழடி ஆராய்ச்சி துவக்கத்தில் நமது தொன்மைக்கு சான்று கிடைக்கும்போது, அமர்நாத்ராமகிருஷ்ணன் இடம்மாற்றம் செய்யப்பட்டார். ஆராய்ச்சிக்கான நிதி நிறுத்தப்பட்டது. தற்போது அறிக்கையை மாற்றி எழுத சொல்கிறார்கள். உண்மையை மாற்ற முடியாது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

ராமர் பாலம், சரஸ்வதி நதி ஆகியவை குறித்த அறிவியல் சான்று, வரலாற்றுச் சான்று உள்ளதா? இவர்கள் அரசியல் காரணங்களுக்காக வாயில் வந்ததையெல்லாம் சொன்னால் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆனால், தமிழுக்கு இருக்கும் தொன்மையை இவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். தமிழ்நாட்டு மக்களின் ஓட்டு வேண்டும். தமிழ் மொழியோ, தமிழ் இனமோ உலகின் தொன்மையானது என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். இதில் இருந்து தமிழர்களின் மனநிலைக்கு எதிரான மனநிலையை கொண்டது பாஜக என்பது நிரூபணமாகிறது. இதுதான் கீழடி விவகாரத்தில் எதிரொலிக்கிறது.

மத்திய அரசு ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் தமிழ் இனம், மொழி தொன்மையானதுதான். அவர்களிடம் நாம் ஒன்றும் சான்றிதழ் எதிர்பார்த்துக் காத்திருக்கவில்லை. இந்தியாவில் ஓர் இனம் உலகின் தொன்மையானது என்று சொல்லும்போது இந்தியர்கள் அனைவரும் கொண்டாடவேண்டும். தமிழ் இனமோ, மொழியோ இந்தியாவுடைய ஓர் அம்சம் என ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். கேட்டால் நம்மை பிரிவினைவாதி என்கின்றனர்.

தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் வேலை அட்டை உள்ள அனைவருக்கும் வேலைதர இரண்டு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் பணம் ஒதுக்கவேண்டும். ஆனால் இந்த ஆண்டு 67 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளனர். இதில் 23 ஆயிரம் கோடி ரூபாய் கடந்த ஆண்டுக்கான நிலுவை தொகை. தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக, காங்கிரஸ் கொண்டுவந்த திட்டம் என்பதால் இந்த திட்டத்தை முடக்கப் பார்க்கின்றனர்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x