கீழடி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிரான திமுக ஆர்ப்பாட்டம் - ஸ்டாலின் அழைப்பு

முதல்வர் ஸ்டாலின் | கோப்புப்படம்
முதல்வர் ஸ்டாலின் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: “கீழடி விவகாரத்தில் நாளை (ஜூன் 18) மதுரை வீரகனூரில் திமுக மாணவரணி நடத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகக் கூடி மத்திய அரசுக்கு நமது தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்துவோம்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “எத்தனை எத்தனை தடைகள் நம் தமிழினத்துக்கு? அத்தனையையும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக எதிர்த்துப் போராடி, அறிவியல் துணைக்கொண்டு நம் இனத்தின் தொன்மையை நிறுவி வருகிறோம். இருந்தும் ஏற்க மறுக்கின்றன சில மனங்கள். திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை.

நாளை மதுரை வீரகனூரில் திமுக மாணவரணி நடத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகக் கூடி மத்திய அரசுக்கு நமது தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்துவோம், அவர்களைத் திருத்துவோம்,” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

முன்னதாக, ‘அறிவியல்பூர்வமாக கீழடி அகழாய்வுகள் நிரூபிக்கப்பட்ட பிறகும் அதை ஏற்று ஆய்வை வெளியிட மறுக்கும் பாஜகவை கண்டித்து மதுரையில் வருகிற 18-ம் தேதி திமுக மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்’ என அறிவிக்கப்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in