Last Updated : 19 Jul, 2018 05:27 PM

 

Published : 19 Jul 2018 05:27 PM
Last Updated : 19 Jul 2018 05:27 PM

புதுச்சேரி பட்ஜெட்டுக்கு கிரண்பேடி ஒப்புதல் தரவில்லை; அரசு ஊழியர்களுக்கு ஊதியம் தருவதில் சிக்கல்: வைத்திலிங்கம் தகவல்

புதுச்சேரி பட்ஜெட்டுக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் தரவில்லை என்று சபாநாயகர் வைத்திலிங்கம் தெரிவித்தார். இதனால் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் தருவதில் சிக்கல் எழுந்துள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட்டை கடந்த ஜூலை 2-ம் தேதி முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் விவாதமும், பட்ஜெட் மீதான பொது விவாதமும் தொடர்ந்து நடைபெற்றது. இம்முறை வரும் 27-ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கிடையில் மாநில அந்தஸ்து தொடர்பாக அனைத்து எம்எல்ஏக்களும் வரும் 23 முதல் 25 வரை டெல்லி சென்று பிரதமர், உள்துறை அமைச்சர், அனைத்துக் கட்சித் தலைவர்களை சந்திக்க முடிவு எடுத்தனர். அதனால் சபை நடவடிக்கைகள் வியாழக்கிழமை நிறைவடைந்தது.

இந்நிலையில் அரசு தீர்மானங்கள் நிறைவடைந்தவுடன் சபாநாயகர் வைத்திலிங்கம், “பட்ஜெட்டுக்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் தராத நிலையில் சபை ஒத்தி வைக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டார்.

அதைத்தொடர்ந்து சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் கேட்டதற்கு, “பட்ஜெட்டுக்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் தரவில்லை. 2018-ம் நிதியாண்டுக்கு நிதி ஒதுக்கம் தொடர்பான அரசு சட்ட முன்வரைவு பேரவையில் நிறைவேற்றப்படவில்லை. ஒப்புதல் வந்த பிறகு மீண்டும் பேரவையை கூட்டி நிதி ஒதுக்கம் தொடர்பாக அரசு சட்டமுன்வரைவை நிறைவேற்ற வேண்டும். பட்ஜெட் நிறைவேறாததால் அரசு ஊழியர்களுக்கு மாத ஊதியம் வழங்குவது கேள்விக்குறியாகியுள்ளது” என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x