“விஜய் அண்ணா மீது எனக்கு எந்த விரோதமும் இல்லை” - திவ்யா சத்யராஜ் விளக்கம்

“விஜய் அண்ணா மீது எனக்கு எந்த விரோதமும் இல்லை” - திவ்யா சத்யராஜ் விளக்கம்
Updated on
1 min read

சென்னை: “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அண்ணா மீது எனக்கு எந்தவொரு தனிப்பட்ட விரோதமும் இல்லை. நான் ஒரு அரசியல்வாதியாகத்தான் அவரை கேள்வி கேட்கிறேன்” என்று திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச் செயலாளரும் நடிகர் சத்யராஜின் மகளுமான திவ்யா சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அண்ணா மீது எனக்கு எந்தவொரு தனிப்பட்ட விரோதமும் இல்லை. நான் ஒரு அரசியல்வாதியாகத்தான் அவரை கேள்வி கேட்கிறேன். எதிர்க்கட்சியில் இருக்கும் பெண்களுக்கும், அவருடைய கட்சியில் இருந்து வெளியே வந்த பெண்களுக்கும் அவருடைய தொண்டர்கள் ஆசிட் வீசுவேன் என்று மிரட்டல் விடுத்திருக்கிறார்கள். இதை அந்த பெண்ணின் அம்மா ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

உங்களுக்கு பாதுகாவலர்கள் இருப்பது போல அவர்களுக்கு பாதுகாவலர்கள் இல்லை. ஒரு கட்சியின் தலைவராக நீங்கள் இதையெல்லாம் தடுக்க வேண்டும். ஒரு திறமையான அரசியல்வாதி மக்கள் மீதுதான் கவனம் செலுத்த வேண்டும். அதிகாரத்தின் மீது அல்ல” இவ்வாறு திவ்யா சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு திமுகவில் இணைந்தார் நடிகர் சத்யராஜின் மகளும், சமூக ஆர்வலருமான திவ்யா சத்யராஜ். ஒரு கூட்டத்தில் பேசிய அவர், “துணை முதல்வர் உதயநிதி ஏசி கேரவனில், சொகுசு விமானத்தில் நண்பர்களின் திருமணத்துக்கு செல்லும் போலி அரசியல்வாதி கிடையாது” என்று கூறியிருந்தார். இதனை வைத்து அவர் தவெக தலைவர் விஜய்யைத்தான் மறைமுகமாக சாடுகிறார் என விஜய் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் திவ்யா சத்யராஜை கடுமையாக விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in