Published : 13 Jun 2025 11:53 AM
Last Updated : 13 Jun 2025 11:53 AM
சென்னை: “என்னை காமராஜர், இளைய காமராஜர் என்றெல்லாம் அழைக்காதீர்கள். 2026 தேர்தல் பற்றி இங்கே பேசாதீர்கள்.” என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். மேலும், விஜய் நிகழ்ச்சியில், அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) 10, 12-ம் வகுப்புகளில் சிறந்த மதிப்பெண்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு 3-ம் கட்டமாக விருது வழங்கி தவெக தலைவர் விஜய் கவுரவித்தார்.
விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய் பேசுகையில், “எல்லோருக்கும் வணக்கம். நேற்று குஜராத்தில் ஒரு மிகப்பெரிய, சோகமான விமான விபத்து நடந்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட சில வீடியோக்கள், புகைப்படங்களைப் பார்க்கும் போது மனம் பதறுகிறது. அடுத்த நொடி நிச்சயம் இல்லாத வாழ்க்கை. இறந்தவர்களுக்காக 2 நிமிடம் மவுனம் அஞ்சலி செலுத்துவோம்.
இங்கு வந்திருப்போருக்கு ஒரு சின்ன வேண்டுகோள். இன்றைய நிகழ்ச்சியில் பேச்சை மட்டும் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம். யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். 2026-ம் ஆண்டு தேர்தல் பற்றி பேசாதீர்கள். என்னை காமராஜர், இளைய காமராஜர் அப்படி எல்லாம் ஏதும் சொல்லாதீர்கள். நீங்கள் உங்களுடைய ஆசிரியர்கள், உங்கள் பள்ளி பற்றி பேசுங்கள். மற்ற விஷயங்கள் பற்றி பேசுங்கள்.” என்றார்.
முன்னர் நடந்த விருது நிகழ்ச்சியின்போது மாணவர் ஒருவரின் தந்தை விஜய்யை ‘இளைய காமராஜர்’ எனப் பாராட்டியது சர்ச்சையைக் கிளப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், பலரும் 2026 தேர்தலில் விஜய் வென்று முதல்வராக வேண்டும் என்றும் பேசியிருந்தனர். இதனையடுத்தே இன்று விஜய் தனது வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT