நோயாளி​ எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமிக்க கோரி அரசு மருத்துவர்கள் பாதயாத்திரை

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் இன்று (ஜூன் 11) சேலம் மேட்டூரிலிருந்து சென்னை நோக்கி பாதயாத்திரை மேற்கொள்கின்றனர்.

இது தொடர்பாக அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை கூறியதாவது: கரோனா பேரிடரின்போது, அசாதாரண சூழ்நிலையில் மக்களுக்கு வரப்பிரசாதமாக இருந்தது அரசு மருத்துவமனைகளும், அரசு மருத்துவர்களுமே என்பது அனைவருக்கும் தெரியும்.

கரோனா பேரிடரில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தன் மனைவிக்கு அரசு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ஐ அமல்படுத்தி, அதன்படி அரசு மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி, கருணாநிதி நினைவிடத்தில் கோரிக்கை மனு சமர்ப்பித்தல், காலவரையற்ற உண்ணாவிரதம் உள்ளிட்ட எத்தனையோ போராட்டங்களை நடத்திய பிறகும், இந்த அரசின் மனசாட்சியை தட்டி எழுப்ப முடியவில்லை. இதனால் வேறுவழியின்றி அடுத்ததாக, ஜூன் 11-ம் தேதி (இன்று) சேலம் மேட்டூரிலிருந்து சென்னை நோக்கி பாதயாத்திரை செல்ல இருக்கிறோம்.

சுகாதாரத் துறையில் தமிழகத்தை முன்மாதிரி மாநிலமாக நிலைநிறுத்தி வரும் அரசு மருத்துவர்களை, தொடர்ந்து தங்களை வருத்திக்கொண்டு போராட வைப்பது அரசுக்கு அழகல்ல என்பது முதல்வருக்கு தெரியும். அதனால், தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு, அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, உயிர்காக்கும் துறையில் மருத்துவர்கள் இன்னும் உற்சாகமாக பணியாற்றவும், தொடர்ந்து சாதனைகள் படைக்கவும் வழிவகுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in