Published : 09 Jun 2025 02:18 PM
Last Updated : 09 Jun 2025 02:18 PM
சென்னை: “தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில், தோட்டத்து வீடுகளில் உள்ள விவசாயிகளை குறிவைத்து நடத்தப்படும் கொலை - கொள்ளை சம்பவங்களை தடுக்க இந்த திமுக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சாமியாத்தாள் என்ற மூதாட்டி, தனது தோட்டத்து வீட்டில் மர்மக் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்ட செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். மறைந்த சாமியாத்தாள் அவர்களின் குடும்பத்தாருக்கு அதிமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்
சாமியாத்தாள் வெட்டப்பட்டு, கோவை KMCH மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவருக்கு ரத்தம் தேவைப் படுவதாகவும் நேற்று காலை தகவல் வந்ததும், நம் அதிமுக ஐடி விங்க்கை சார்ந்த இளைஞர்கள் அதற்கான ஏற்பாடுகளை துரிதமாக மேற்கொண்டும், அதற்குள் சிகிச்சைப் பலனின்றி சாமியாத்தாள் உயிரிழந்துவிட்டார் என்பது மிகவும் வேதனைக்குரியது .
மாநிலத்தையே உலுக்கிய பல்லடம் மூவர் கொலை, சிவகிரி இரட்டைக் கொலை சம்பவங்களுக்குப் பிறகும் இந்த திமுக அரசு இன்னும் திருந்தவில்லை. தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில், தோட்டத்து வீடுகளில் உள்ள விவசாயிகளை குறிவைத்து நடத்தப்படும் இந்த கொலை - கொள்ளை சம்பவங்களை தடுக்க இந்த திமுக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?
பல்லடம், சிவகிரி வழக்குகளில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மட்டுமே இந்த குற்றங்களை செய்தவர்களா என்ற சந்தேகம் மக்களிடையே ஏற்கெனவே உள்ள நிலையில், இச்சம்பவம் அச்சந்தேகத்தை வலுப்பெறவே செய்துள்ளது. தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொரு நாளும் பாதுகாப்பாக கடப்பதையே ஓர் அக்னிப் பரீட்சையாக மாற்றிய ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
சித்தம்பூண்டி சாமியாத்தாள் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், தொடரும் சட்டம் - ஒழுங்கு சீர்கேடுகளை இனியேனும் அடக்க முயலுமாறு முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT