Published : 07 Jun 2025 06:11 AM
Last Updated : 07 Jun 2025 06:11 AM

ரயில்வே கேட்களை கடக்கும்போது செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும்: ரயில்வே அதிகாரிகள் அறிவுறுத்தல்

சென்னை: ரயில்வே கேட்டுகளை கடக்கும்போது, செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும் என, சர்வதேச லெவல் கிராஸிங் தினத்தை முன்னிட்டு, சென்னையில் பல்லாவரம் - தாம்பரம் மார்க்கத்தில் ரயில்வே கேட் முன்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ரயில்வே அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

ரயில் பாதை அருகே அமைக்கப்பட்டுள்ள ரயில்வே கேட்டை கடந்து செல்லும் போது, சிலர் பாதுகாப்பு விதிமுறை பின்பற்றுவதில்லை. இதனால், ரயில்களில் மோதி உயிரிழக்கின்றனர். எனவே, ரயில்வே பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வலியுறுத்தி, ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் சர்வதேச லெவல் கிராஸிங் வாரமாக கடைபிடிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

அந்த வகையில், சர்வதேச லெவல் கிராஸிங் விழிப்புணர்வு தின நிகழ்ச்சியை, சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகத்தில் கூடுதல் ரயில்வே மேலாளர் தேஜ் பிரதாப் சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னை ரயில்வே கோட்டத்தில் பல்லாவரம் - தாம்பரம் மார்க்கத்தில் ரயில்வே கேட் எண்- 26 முன்பு, ரயில்வே கோட்ட முதுநிலை பாதுகாப்பு அதிகாரி சத்தியசீலன் தலைமையில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

ரயில்வே கேட்களை பாதுகாப்பாக கடந்து செல்லக் கோரி வழிகாட்டி துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன. ரயில்வே பாதுகாப்பு விதிகளை பார்த்து, கடந்து செல்லவும் அறிவுறுத்தப்பட்டது. மூடப்பட்ட ரயில்வே கேட்டை பொதுமக்கள் கடந்து செல்லக்கூடாது என்றும், ரயில் கேட் அருகே தண்டவாளத்தை கடந்து செல்லும் போது, செல்போனில் பேசவோ, ஹெட்போனில் பாட்டு கேட்டப் படியோ செல்லக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x