

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு தீர்ப்பை சுட்டிக்காட்டி, அவதூறுகளை அள்ளித் தெளித்த எதிர்க்கட்சியினரின் எண்ணம் தவிடுபொடியானதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான வழக்கில், கைதாகி சிறையில் உள்ள ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி நேற்று தீர்ப்பளித்தார். ஞானசேகரனுக்கான தண்டனையை வரும் ஜூன் 2-ம் தேதி அறிவிப்பதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவு: சென்னை மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக வழக்கைத் துரிதமாக நடத்தி, ஐந்தே மாதத்தில் நீதியை பெற்றுத் தந்துள்ளது நமது காவல்துறை. விசாரணை அதிகாரிகளுக்கும் அரசு வழக்கறிஞர்களுக்கும் நீதிமன்றத்துக்கும் நன்றி. காவல் துறையினரிடம் நான் தொடர்ந்து கூறுவது, ‘குற்றம் நடக்கக்கூடாது. நடந்தால் எந்தக் குற்றவாளியும் தப்பக்கூடாது. விசாரணையைத் துரிதமாக நடத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும்’’ என்பதுதான்.
குற்றங்களின் கூடாரமாக அன்று அரசை நடத்தி இன்று அவதூறுகளை அள்ளித் தெளித்து, மலிவான அரசியல் செய்ய துடித்த எதிர்க்கட்சியினரின் எண்ணத்தை தவிடு பொடியாக்கி உள்ளோம். சட்டநீதியையும், பெண்கள் பாதுகாப்பையும் எந்நாளும் உறுதி செய்வோம். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
கனிமொழி பெருமிதம்: திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. நேற்று வெளியிட்ட அறிக்கை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் மீது சுமத்தப்பட்ட 12 குற்றச்சாட்டுகளில், 11 குற்றச்சாட்டுகள் நிரூபணமாகி உள்ளதாக சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது.
சம்பவம் நடந்த நாளிலிருந்து சரியாக 157-ஆவது நாளில் குற்றவாளியின் தண்டனையை உறுதி செய்திருக்கிறது காவல் துறை. சிபிஐ கூட இவ்வளவு துரிதமாக விசாரித்திருக்க முடியுமா எனக் கேட்கும் அளவுக்கு தமிழகக் காவல் துறை மிகச்சிறப்பாக வழக்கை நடத்தி குற்றவாளியின் குற்றத்தை நிரூபித்திருக்கிறது. அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் தீர்ப்பு வெளியாவதற்கு 15 நாட்களுக்கு முன்புதான், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்குச் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
அந்த வழக்கோடு அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். பழனிசாமி ஆட்சியில், பொள்ளாச்சி பாலியல் குற்றச்சம்பவம் கடந்த 2016 முதல் 2018-ம் ஆண்டு வரை நடைபெற்றாலும், 2019-ம் ஆண்டுதான் வெளிச்சத்துக்கு வந்தது. அன்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ஊடகங்களும் அந்த வழக்கை வெளிக் கொணராமல் போயிருந்தால், பழனிசாமி அரசு மூடி மறைத்திருக்கும்.
அதிமுகவினர் சம்பந்தப்பட்டிருந்ததால் வழக்கைப் பதியாமல் இழுத்தடித்ததுடன் பாதிக்கப்பட்ட மாணவியின் அண்ணனையே தாக்க முயன்றனர். கடந்த 2019 பிப்ரவரி தொடங்கி 2025 மே மாதம் வரை ஆறரை ஆண்டுகள் பொள்ளாச்சி பாலியல் வழக்கு நடைபெற்றது. ஆனால், அண்ணா பல்கலைக்கழக வழக்கை விசாரித்தது தமிழக காவல் துறை, 157 நாளில் தீர்ப்பை பெற்றுக் கொடுத்திருக்கிறது. இவ்வாறு கூறியுள்ளார்.