Published : 28 Jul 2018 02:56 PM
Last Updated : 28 Jul 2018 02:56 PM
தமிழக முன்னாள் முதல்வர், திமுக தலைவர் கருணாநிதியின் உடலநலம் குறித்து அரசியல் தாண்டி அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் நேரில் சென்று நலம் விசாரித்து வருவது திமுக தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதல்வராக 5 முறை, நீண்டகாலம் சட்டப்பேரவை உறுப்பினர், அரசியல் அனுபவம், நிர்வாகத்திறமைக்கு பெயர் பெற்ற கருணாநிதி தமிழக அரசியலின் பிரதான சக்தியாக விளங்குபவர்.
கருணாநிதியை எதிர்த்தால் அரசியல் செய்யலாம் என அரசியலில் குதித்து வாழ்வுபெற்றவர்கள் பலர் உண்டு. ஆனாலும் கருணாநிதி அவர்களிடம் வஞ்சகம் பாராட்டியதில்லை. பண்பாடு மிக்க அரசியல் தலைவர். தமிழகத்தின் மிக மூத்த தலைவரான கருணாநிதியிடம் அரசியல் பயின்றவர்கள் அநேகர் இன்று அரசியல் தலைவர்களாக உள்ளனர்.
தமிழக அரசியலில் இக்கட்டான காலகட்டமாக ஜெயலலிதாவின் மறைவும், அடுத்து கருணாநிதியின் ஓய்வும் மிகப்பெரிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நேரத்தில் கருணாநிதியின் உடல் நிலை நலிவடைந்ததால் அரசியல் தாண்டி எதிர் முகாமில் இருந்தவர்களும் கவலை அடைந்தனர்.
தினந்தோறும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கோபாலபுரம் இல்லத்திற்கும், பின்னர் காவேரி மருத்துவமனைக்கும் வந்தவண்ணம் உள்ளனர். தமிழகம் தாண்டி தேசிய அரசியலிலும் திமுக கால்பதித்ததன் மூலம் தவிர்க்க இயலாத தலைவராக இருந்த கருணாநிதி வட இந்தியாவின் பல தலைவர்களுக்கு நண்பர்.
இதனால் அவரது உடல் நலத்தை விசாரிக்க தமிழகம் தாண்டி அகில இந்தியாவிலிருந்தும் தலைவர்கள் விசாரிக்க வந்தவண்ணம் உள்ளனர். ஓபிஎஸ், ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, டிடிவி தினகரன், திவாகரன், பொன் ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன், நல்லகண்ணு, கே.பாலகிருஷ்ணன், அகில இந்திய காங்கிரஸ் மற்றும் இடதுசாரி தலைவர்கள் என பலர் தேடி வந்து நலம் விசாரிக்கும் பண்பாட்டைக் கடந்த நான்கு நாட்களாக காணும் திமுக தொண்டர்கள் நெகிழ்ந்து போயுள்ளனர்.
கருணாநிதி முழுமையாக நலம்பெற வேண்டும், விரைவில் அவர் வீடு திரும்ப வேண்டும் என பலரும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திரபாலாஜி, செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் கருணாநிதி விரைவில் உடல் நலம் பெற விருப்பம் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT