

சேலம்/தருமபுரி: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 111.73 அடியாக உயர்ந்துள்ளது. மேலும், நீர்வரத்து விநாடிக்கு 3,548 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்துவரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 2,878 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 3,548 கனஅடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. நேற்று முன்தினம் 111.60 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை 111.73 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் 80.89 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் கடந்த 2 நாட்களாக நீர்வரத்தில் மாற்றமின்றி உள்ளது. நீர்வரத்து நேற்று முன்தினம் விநாடிக்கு 4,000 கனஅடியாக இருந்த நிலையில், நேற்று மாலை அளவீட்டின்போதும் 4,000 கனஅடியாகவே நீடிக்கிறது.