

சென்னை: வீடுகளுக்கு எவ்வித மின்கட்டண உயர்வும் இருக்காது. அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும் என மின்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 3 கோடிக்கும் அதிகமான மின்இணைப்புகள் உள்ளன. இவற்றுக்கான மின்சாரத்தைக் கையாளும் மின்வாரியத்தின் இழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, கடந்த 2022-ல் மின்கட்டணம் 30 சதவீதத்துக்கு மேல் உயர்த்தப்பட்டது.
அத்துடன், 2026-27ம் ஆண்டு வரை ஆண்டுதோறும் ஜூலை 1-ம் தேதி முதல் மின்கட்டணத்தை உயர்த்தவும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியது. அதன்படி, கடந்த 2023 ஜூலையில் 2.18 சதவீதமும், 2024-ம் ஆண்டு 4.83 சதவீதமும் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதில், வீடுகளுக்கான கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியது.
இதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டும் 6 சதவீதம் அல்லது ஏப்ரல் மாத பணவீக்க விகிதம் ஆகிய இரண்டில் எது குறைவோ, அந்த அளவுக்கு கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். இதன்படி, 3.16 சதவீதம் அளவுக்கு மின்கட்டணம் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உயர்வு ஜூலை 1 முதல் அமல்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக, நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களில் செய்தி வெளியானது.
இந்நிலையில், இச்செய்திக்கு மின்துறை அமைச்சர் சிவசங்கர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
கடந்த சில நாட்களாக செய்தி ஊடகங்களில் மின்கட்டண உயர்வு குறித்து அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. தற்சமயம் மின்கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் வெளியிடப்படவில்லை.
எனினும், ஒழுங்குமுறை ஆணையம், மின்கட்டணம் தொடர்பான ஆணை வழங்கும்போது, அதனை நடைமுறைபடுத்துகையில் வீட்டு மின்நுகர்வோருக்கு எவ்வித மின்கட்டண உயர்வும் இருக்கக் கூடாது எனவும், தற்போது வழங்கப்படும் அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடர வேண்டும் எனவும் தமிழக முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.