

சென்னை: சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், வீட்டுவசதி வாரியம், உயர் கல்வி துறையில் ரூ.870.60 கோடியில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள், கட்டிடங்களை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.468.42 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின்கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சென்னை கைலாசபுரம் திட்டப்பகுதி, விருதுநகர்- சம்பந்தபுரம், மதுரை - உச்சபட்டி , புதுக்கோட்டை- சந்தைப்பேட்டை, கள்ளக்குறிச்சி - கீரணூர்-2, திருப்பூர் - ஹைடெக் பார்க் நகர், காமராஜர்நகர் பெருந்தொழுவு, காஞ்சிபுரம் - சாலமங்கலம்-1, கடலூர் - கீழகுப்பம்-1 மற்றும் 2, பாலக்கொல்லை, திருவதிகை, ஈரோடு- கவுந்தப்பாடி, திருவாரூர்- கண்டிதம்பேட்டை, கரூர்-வேலம்பாடி திட்டப்பகுதிகளில் ரூ.527.84 கோடியில் கட்டப்பட்டுள்ள 4,978 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதேபோல் ரூ.207.90 கோடியில் கட்டப்பட்ட வணிக வளாகங்களை முதல்வர் திறந்து வைத்தார். மேலும், 4 இடங்களில் திறந்தவெளி விளையாட்டு மைதானங்கள், நவீன உடற்பயிற்சி பூங்காக்கள் என ரூ.14.66 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் திறந்து வைத்தார். இதுதவிர, சென்னையில் பல்வேறு பகுதிகளில் ரூ.255.60 கோடியில் 20 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
நிகழ்வில், அமைச்சர்கள் சு.முத்துசாமி, தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலர் நா.முருகானந்தம், வீட்டுவசதித்துறை செயலர் காகர்லாஉஷா, சிஎம்டிஏ முதன்மை செயல் அலுவலர் சிவஞானம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் பூச்சி எஸ்.முருகன், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் அன்சுல் மிஸ்ரா, வாரிய இணை மேலாண்மை இயக்குநர் க.விஜயகார்த்திகேயன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் ஜி.எஸ்.சமீரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாணவிகளுடன் கலந்துரையாடல்: இதனிடையே சென்னை ராணி மேரி கல்லூரியில் ரூ.42 கோடியில் விடுதிக் கட்டிடம் உட்பட உயர்கல்வித் துறை சார்பில் ரூ.120.02 கோடி மதிப்பிலான கட்டிடங்களை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.207.82 கோடியில் கட்டப்பட உள்ள கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
முதல்வரால் நேற்று திறக்கப்பட்ட, அடிக்கல் நாட்டப்பட்ட கட்டிடங்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.269.52 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை ராணி மேரி கல்லூரியில் ரூ.42 கோடியில் நவீன வசதிகளுடன் 455 மாணவியர் தங்கிப் படிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள விடுதிக் கட்டிடத்தை நேற்று முதல்வர் திறந்து வைத்து பார்வையிட்டதுடன் மாணவியருடன் கலந்துரையாடினார்.
மேலும் தமிழகம் முழுவதும் அரசு பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் அரசு பாலிடெக்னிக், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ரூ.120 கோடியே 2 லட்சத்து 80 ஆயிரம் செலவில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை முதல்வர் திறந்தார். அதேபோல் பல்வேறு அரசு கல்லூரிகளில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.
இவற்றின் மொத்த மதிப்பு ரூ.207 கோடியே 82 லட்சத்து 47 ஆயிரம் ஆகும். மேலும், பி.வில்சன் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 5 கோடியில் சென்னை ராணிமேரி கல்லூரி வளாகத்தில் கட்டப்படவுள்ள கலையரங்கத்துக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
ராணி மேரி கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சு.முத்துசாமி, கோவி.செழியன், எம்.பி.க்கள் வில்சன், தமிழச்சி தங்கபாண்டியன், உயர்கல்வித் துறை செயலர் சி.சமயமூர்த்தி, கல்லூரி கல்வி ஆணையர் எ.சுந்தரவல்லி, தொழில்நுட்பக் கல்வி ஆணையர் ஜெ.இன்னசன்ட் திவ்யா, ராணி மேரி கல்லூரி முதல்வர் பி. உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.