அரசு மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்கள் இருப்பதை உறுதி செய்க: தினகரன்

அரசு மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்கள் இருப்பதை உறுதி செய்க: தினகரன்

Published on

சென்னை: அரசு மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகாரன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவரது வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், "மதுரை மாவட்டம் வளையங்குளத்தில் நேற்று பெய்த கனமழையால் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்தது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. விபத்தில் சிக்கியவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு வளையங்குளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அம்மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் காயமடைந்தவர்கள் அடுத்தடுத்த மருத்துவமனைகளுக்கு அலைக்கழிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாகவும் புகார் எழுந்துள்ளது.

வளையங்குளம் மருத்துவமனையில் நிலவும் மருத்துவர்கள் பற்றாக்குறை மற்றும் மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாட்டை பலமுறை சுட்டிக்காட்டியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத சுகாதாரத் துறையின் அலட்சியப் போக்கே மூவரின் உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, சுகாதாரத் துறையின் அலட்சியப் போக்கால் உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்குவதோடு, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” என்று தினகரன் கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in