டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் வழக்கு: அமலாக்கத்துறை சோதனை நிறைவு

டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் வழக்கு: அமலாக்கத்துறை சோதனை நிறைவு
Updated on
1 min read

சென்னை: டாஸ்மாக்கில் நடைபெற்றதாக கூறப்படும் ரூ.1,000 கோடி ஊழல் வழக்கு தொடர்பாக டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் வீடு உள்பட சென்னையில் 12 இடங்களில் 2 நாட்களாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நேற்று முன்தினம் நள்ளிரவில் நிறைவு பெற்றது.

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து டெண்டர் வழங்கியது உள்ளிட்டவற்றில் ரூ.1000 கோடி ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.

இதுதொடர்பாக, கடந்த மார்ச் மாதம் எழும்பூரில் உள்ள தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதன் தொடர்ச்சியக கடந்த 16-ம் தேதி சென்னை மணப்பாக்கம் சி.ஆர்.புரத்தில் உள்ள டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ஆழ்வார்பேட்டை கே.பி.தாசன் சாலையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு, சூளைமேடு ராஜகீழ் வீதியில் உள்ள தனியார் மதுபான நிறுவனத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வரும் மேகநாதன் வீடு, திருவல்லிக்கேணியில் உள்ள தொழிலதிபர் தேவக்குமார் வீடு, சாஸ்திரி நகர் 2-வது குறுக்குத் தெருவில் உள்ள மின்வாரிய ஒப்பந்ததாரர் ராஜேஷ்குமார் வீடு, சேத்துப்பட்டு ஜெகநாதபுரம் முதல் தெருவில் உள்ள பாபு வீடு, தி.நகர் ஆற்காடு சாலையில் உள்ள கேசவன் வீடு, எம்ஆர்சி நகரில் உள்ள தொழிலதிபர் ரித்தீஷ் வீடு உள்பட சென்னையில் 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தொடர்ந்து, 2-வது நாளாக நேற்று முன்தினம் நடைபெற்ற சோதனை நள்ளிரவு 2 மணி அளவில் முடிவடைந்தது. அனைத்து இடங்களிலும் நடைபெற்ற சோதனையின்போது ரூ.1,000 கோடி ஊழல் தொடர்பாக பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றி அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்களது காரில் எடுத்து சென்றனர்.

சோதனை நடந்த 2 நாட்களும் விசாகனை அமலாக்கத்துறை அதிகாரிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையின்போது அவரது செல்போன், லேப்டாப்பில் இருந்து பல்வேறு ஆதாரங்களை அமலாக்கத்துறையினர் திரட்டி உள்ளனர்.

அந்தவகையில், டாஸ்மாக் முறைகேடு வழக்கில் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளனர். இந்த வழக்கில் இன்னும் பல தொழிலதிபர்கள், முக்கிய அரசியல் பிரமுகர்கள் சிக்குவார்கள் என கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in