Published : 17 May 2025 12:48 PM
Last Updated : 17 May 2025 12:48 PM

கரூர் அருகே ஆம்னி பேருந்து - சுற்றுலா வேன் மோதி விபத்து: 4 பேர் உயிரிழப்பு

கரூர் அருகே ஆம்னி பேருந்தும் சுற்றுலா வேனும் மோதிக்கொண்ட விபத்தில் உருக்குலைந்த வேன்

கரூர்: கரூர் அருகே ஆம்னி பேருந்தும் சுற்றுலா வேனும் மோதிக் கொண்ட விபத்தில் வேன் ஓட்டுநர், சிறுவன், சிறுமி உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 14 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

பெங்களூருவில் இருந்து நாகர்கோவிலுக்கு தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இன்று (மே 17) அதிகாலை கரூர் அருகேயுள்ள நாவல் நகர் பகுதியில் சென்றபோது சின்னவடுகப்பட்டியில் இருந்து உப்பிடமங்கலம் நோக்கி முன்னால் சென்று கொண்டிருந்த ட்ராக்டர் மீது ஆம்னி பேருந்து மோதியது. இதில் நிலைத்தடுமாறிய பேருந்து சாலை மையத்தடுப்பை தாண்டி கோவில்பட்டியில் இருந்து ஏற்காடுக்கு 32 பயணிகளுடன் சுற்றுலா சென்ற வேன் மீது மோதியது.

இதில் சுற்றுலா வேன் ஓட்டுநர் சசிகுமார் (52), வேனில் பயணம் செய்த சிறுமி தக்ஷிகா (8) உள்ளிட்ட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வேனில் பயணம் செய்த 12 பேர், ட்ராக்டர் ஓட்டுநர், ஆம்னி பேருந்து ஓட்டுநர் என 14 பேர் காயமடைந்தனர். வாங்கல் போலீஸார் மற்றும் கரூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய வீரர்கள் உதவியுடன் விபத்தில் காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

இந்த விபத்தில் காயமடைந்த சரவணன் (47), சுகுணாதேவி (36), சபின் (25), அனு (20), ஆகாஷ் (23), தஷ்மிதா (6), கார்த்திக்ஐங்கரன் (8), தருண்விநாயக் (6), முருகன் (55), ரித்திகா (3), மீனா (51), அனில்பிரசாத் (30), தருணிகா (12), ஆர்த்தி (23) ஆகியோர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து வாங்கல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், உயிரிழந்த 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x