டாஸ்மாக் வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

டாஸ்மாக் வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய வழக்கில், மத்திய மாநில அரசுகள், சிபிஐ, அமலாக்கத் துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாசலபதி என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை அதிகவிலைக்கு விற்பனை செய்தது, பார் உரிமம் வழங்கியது உள்ளிட்டவற்றில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் கூறப்பட்டது.

இதுதொடர்பாக, கடந்த 2017 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத் துறையினர், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் சோதனை நடத்தினர்.

இந்நிலையில், இந்த முறைகேடுகள் தொடர்பாக டாஸ்மாக் மற்றும் அதன் அதிகாரிகளுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். அமலாக்கத் துறை விசாரணையை முடக்கும் நோக்கில் மாநில அரசு செயல்படுகிறது. ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு வழக்கை நியாயமாகவும், எந்த இடையூறும் இன்றி விசாரிக்க வேண்டும் என்பதால் சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். டாஸ்மாக் அதிகாரிகளுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை விசாரிக்க மாநில அரசுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள், சிபிஐ, அமலாக்கத் துறை, டாஸ்மாக் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in