Published : 31 Jul 2018 02:47 PM
Last Updated : 31 Jul 2018 02:47 PM

உள்ளாட்சி தேர்தல் அட்டவணை: 6-ம் தேதி தாக்கல் செய்யாவிட்டால் அவமதிப்பு நடவடிக்கை: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

 உள்ளாட்சி தேர்தல் நடத்த இன்னும் எத்தனை ஆண்டுகள் திட்டம் போடுவீர்கள் என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கு கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், வரும் ஆகஸ்ட் 6-ம் தேதி அட்டவணை தாக்கல் செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கோரி திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். இந்த வழக்கில் கடந்த ஆண்டு மார்ச் 30-ம் தேதி உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவில் 2017 மே 15 -ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்கக் கெடு விதித்தது.

அதன் பின்னர் கடந்த ஆண்டு செப்டம்பர் 3- ம் தேதி அளித்த உத்தரவில் நவம்பர் 17-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவைச் செயல்படுத்தாத மாநிலத் தேர்தல் ஆணையம் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரித் திமுக சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததால் மத்திய அரசு அளிக்க வேண்டிய 4000 கோடி ரூபாய் நிதி முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அப்போது, மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நெடுஞ்செழியன், தொகுதி மறுசீரமைப்பு மற்றும் தேர்தலை நடத்துவது தொடர்பாக திட்டமிட்டு வருவதாக தெரிவித்தார். ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், எத்தனை ஆண்டுகள்தான் தேர்தலை நடத்த திட்டம் போடுவீர்கள் என கேள்வி எழுப்பினர்.

கடந்த ஆண்டே 2 முறை தேர்தலை நடத்த உத்தரவிட்டும், இதுவரை ஏன் அந்த உத்தரவு மதிக்கப்படவில்லை என்றும் வினவினர். உடனடியாக 10 நிமிடத்தில் இது குறித்த பதிலுடன் மூத்தவழக்கறிஞர் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இல்லாவிட்டால் இது நீதிமன்ற அவமதிப்பாக கருதி உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கிறஞர், தேர்தல் தொடர்பாக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அதற்கான அவகாசம் வேண்டும் எனவும் கோரினார்.

இதை ஏற்ற அமர்வு, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அட்டவணையை ஆகஸ்ட் 6-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டதோடு அன்றைய தினம் தாக்கல் செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தனர், வழக்கு விசாரணை ஆகஸ்ட் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x