Published : 11 May 2025 05:27 AM
Last Updated : 11 May 2025 05:27 AM
மகப்பேறு இறப்பு விகிதம் ஒரு லட்சம் பிரவசத்துக்கு 70 என தேசிய அளவில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் 39 ஆக குறைந்துள்ளது. மருந்து கட்டுப்பாட்டு துறையுடன் ஒருங்கிணைந்து, தனியார் மருந்தகங்களில் கருக்கலைப்பு மருந்துகள் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைப்பது, கள பணியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், மருத்துவம் சார்ந்த அணுகுமுறைகள், கொள்கை சீர்திருத்தங்கள், சமூக பங்களிப்பு குறித்த பயிலரங்கம் சென்னையில் நடைபெற்றது. சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது:
நாட்டில் மகப்பேறு இறப்பை ஒரு லட்சம் பிரசவங்களுக்கு 70 என்ற அளவில் குறைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2024-25-ம் ஆண்டு சுகாதார கண்காணிப்பு தகவல் அறிக்கையின்படி தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் ஒரு லட்சம் பிரவசத்துக்கு 39 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் 99.9 சதவீத பிரசவங்கள் (8.02 லட்சம்) மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன. அதில் 56 சதவீத (4.51 லட்சம்) பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் நடக்கின்றன. ஒவ்வொரு மாதமும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு, கர்ப்பகால சிக்கல்கள் உள்ள கர்ப்பிணிகளை கண்டறிந்து, மகப்பேறு மருத்துவர்கள் மூலம் ஆலோசனை, சிகிச்சை வழங்கப்படுகிறது. இதில், கர்ப்பிணிகளை கண்டறிவதில் முதல் இடத்துக்கான விருதையும், அதிக மகப்பேறு மையங்கள் கொண்டதில் 2-வது இடத்துக்கான விருதையும் தமிழகத்துக்கு மத்திய சுகாதாரத் துறை வழங்கியுள்ளது.
கர்ப்பகாலம் மற்றும் பிரசவத்துக்கு பிறகு ஏற்படும் சிக்கல்கள் உள்ள தாய்மார்களுக்கு சிகிச்சை அளிக்க, அனைத்து அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளிலும் நவீன கருவிகளுடன் கூடிய சிறப்பு பராமரிப்பு பிரிவு செயல்படுகிறது.
மருந்து கட்டுப்பாட்டு துறையுடன் ஒருங்கிணைந்து, தனியார் மருந்தகங்களில் கருக்கலைப்பு மருந்துகள் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. பேறுகாலம் தொடங்கி குழந்தையின் 18 வயது வரையிலான விவரங்கள் ‘பிக்மி’ (PICME) மென்பொருள் மூலம் பதிவு செய்யப்படுகிறது. மென்பொருள், ‘102’ அழைப்பு சேவை மூலமாக மாநில, மாவட்ட அளவில் கர்ப்பகால சிக்கல்கள் உள்ள கர்ப்பிணிகள் கண்காணிக்கப்படுகின்றனர்.
அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், 800 தனியார் மருத்துவமனைகளில் மகப்பேறு கவனிப்பு சேவைகள், பிரசவ சேவைகள் பதிவு செய்யப்படுகின்றன. கர்ப்பிணிகள் மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள நோயுற்ற குழந்தைகளுக்கு இலவச மருந்து, உணவு, நோய் கண்டறிதல் ஆகிய சேவைகள் வழங்கப்படுகின்றன. மருத்துவமனை, பரிந்துரை மையங்களுக்கு வந்துசெல்ல இலவச போக்குவரத்து சேவை வழங்கப்படுகிறது. மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைக்க மாநில, மாவட்ட அளவில் பணி குழு அமைக்கப்பட்டு, அனைத்து மகப்பேறு உயிரிழப்புகளும் ஆய்வு செய்யப்படுகின்றன.இவ்வாறு அவர் பேசினார்.
சுகாதாரத் துறை செயலர் செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண் தம்புராஜ், மருத்துவ கல்வி, ஆராய்ச்சி கூடுதல் இயக்குநர் தேரணிராஜன், தேசிய நலவாழ்வு குழும ஆலோசகர் ஷோபா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட அளவில் உள்ள அனைத்து சீமாங்க் மையங்களில் இருந்து 129 மகப்பேறு மருத்துவர்கள் பயிலரங்கில் கலந்துகொண்டனர். மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைப்பதில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT