Published : 10 May 2025 05:25 AM
Last Updated : 10 May 2025 05:25 AM

“திரா​விட மாடலின் வெர்​சன் 2.0 இனி​தான் தொடங்​கப்​போகிறது” - முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

திருச்சி பஞ்சப்பூரில் நேற்று கலைஞர் கருணாநிதி பேருந்து முனையத்தை திறந்து வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன், அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ரகுபதி, சிவசங்கர், சிவ.வீ.மெய்யநாதன் மற்றும் அருண்நேரு எம்.பி. உள்ளிட்டோர்.

திருச்சி: சரிவில் இருந்த தமிழகத்தை மீட்டு நம்பர்-1 மாநிலமாக்கி சாதனை படைத்துள்ளோம். இது வெறும் தொடக்கம்தான், திராவிட மாடல் ஆட்சியின் வெர்சன் 2.0 இனி சிங்கப் பாதையாக இருக்கும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

திருச்சி பஞ்சப்பூரில் ரூ.408 கோடியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி பேருந்து முனையத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து, ரூ.1,032.15 கோடி மதிப்பிலான 7,122 முடிவுற்ற பணிகளைத் திறந்துவைத்து, ரூ.527.63 கோடி மதிப்பிலான 3,597 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் ஸ்டாலின், ரூ.856 கோடியில் 1,17,132 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தற்போது திறக்கப்பட்டுள்ள பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், குளிரூட்டப்பட்ட வசதியுடன் விமான நிலையத்துக்கு நிகராக அமைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் ரூ.408 கோடியில் புதிய பேருந்து முனையம், ரூ.128 கோடியில் அண்ணா சரக்கு வாகன முனையம், ரூ.236 கோடியில் பெரியார் காய்கறி அங்காடி, ரூ.290 கோடியில் காமராஜர் பெயரில் நூலகம், ரூ.150 கோடியில் ஒலிம்பிக் அகாடமி, ரூ.18.9 கோடியில் பறவைகள் பூங்கா என திட்டங்கள் அணிவகுக்கின்றன.

இதுதவி, மணப்பாறை சிப்காட், டைடல் பூங்கா, ஜல்லிக்கட்டு அரங்கம் என திருச்சி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.26 ஆயிரம் கோடியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. 9.69 சதவீத பொருளாதார வளர்ச்சி என்பது, இதுவரை தமிழகம் காணாத வளர்ச்சியாகும்.

எல்லாருக்குமான ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி திகழ்கிறது. வருங்காலங்களில் இதைவிட பெரிய சாதனைகள் படைப்போம். இதைத்தான் நமது எதிரிகளால் தாங்க முடியவில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் 3 வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு, சிஏஏ சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததுடன், ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கும் தலையாட்டினார்கள். தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு, சாத்தான்குளம் சம்பவம் என பொதுமக்களை கொன்று குவித்தனர்.

அப்படிப்பட்ட இருண்ட ஆட்சியில் இருந்து நான்கே ஆண்டுகளில் நம்முடைய விடியல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதுவெறும் தொடக்கம்தான். திராவிட மாடலின் வெர்சன் 2.0 இனிதான் தொடங்கப்போகிறது. நாங்கள் 4 ஆண்டுகளில் சரிவில் இருந்து மீட்டு, நம்பர் 1 மாநிலமாக்கி சாதனை படைத்தோம். இனி நாம் போகின்ற பாதை சிங்கப் பாதையாக இருக்கும், ராக்கெட் வேக வளர்ச்சியை வரும் காலத்தில் பார்ப்பீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.

ராணுவ வீரர்களுக்கு மரியாதை: விழாவில், பஹல்ஹாம் தீவிரவாத தாக்குதல் மற்றும் பாகிஸ்தான் ராணுவ குண்டு வீச்சில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், இந்திய ராணுவத்தினருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைவரும் ஒரு நிமிடம் எழுந்து நின்று வீர வணக்கம் செலுத்தினர்.

முன்னதாக, பஞ்சப்பூரில் ரூ.236 கோடியில் 22 ஏக்கர் பரப்பில் கட்டப்பட உள்ள இருக்கும் பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடிக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் ஸ்டாலின், அதன் முகப்பில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலையை திறந்து வைத்தார். இதேபோல, அதேபகுதியில் ரூ.128.94 கோடியில் கட்டப்பட்டுள்ள அண்ணா கனரக சரக்கு வாகன முனையம், அங்கு அமைக்கப்பட்டுள்ள அண்ணா சிலை ஆகியவற்றையும் முதல்வர் திறந்து வைத்தார்.

விழாவில், அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ரகுபதி, சிவசங்கர், சிவ.வீ.மெய்யநாதன், மேயர் மு.அன்பழகன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை முதன்மைச் செயலர் தா. கார்த்திகேயன், நகராட்சி நிர்வாக இயக்குநர் எஸ்.சிவராசு, மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் வே.சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x