Published : 09 May 2025 06:10 AM
Last Updated : 09 May 2025 06:10 AM

வழக்கறிஞர் தாக்கப்பட்டதாக புகார்: டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: பொய் வழக்கு பதிந்து போலீஸார் தன்னை தாக்கியதாக வழக்கறிஞர் அளித்த புகார் மனு தொடர்பாக டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: சென்னை பெசன்ட் நகரில் மனித உரிமைகள் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை முன்வைத்து கடந்த டிச. 10-ம் தேதி கண்கவர் அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்கு அனுமதியளிப்பதாக வாக்குறுதி அளித்த காவல்துறையினர், நிகழ்ச்சிக்கு முந்தைய நாள் அனுமதி இல்லை என தெரிவித்தனர். அத்துடன், நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்களை தடுத்து நிறுத்தினர்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் இதுகுறித்து கேட்க சென்றபோது, போலீஸார் என் மீது பொய் வழக்கு பதிந்து, கடுமையாக தாக்கி சிறையில் அடைத்தனர். இதற்கு காரணமான காவல் ஆணையர் உள்ளிட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனுவை ஏற்றுக்கொண்ட வழக்கு பதிவு செய்த ஆணையம், இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து டிஜிபி 15 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x