Published : 07 May 2025 01:01 PM
Last Updated : 07 May 2025 01:01 PM
தாம்பரம் வட்டத்தில் மக்கள் தொகை மற்றும், சேவை அடிப்படையில் விஏஓ-க்கள் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழக வருவாய் துறை நிர்வாகத்தில், 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள் உள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம் ஆகிய, 3 வருவாய் கோட்டங்களும், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், செங்கல்பட்டு, செய்யூர், தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் ஆகிய 8 வட்டங்களும், 40 உள்வட்டங்களும், 636 வருவாய் கிராமங்களும் உள்ளன.
இதில் தாம்பரம், பல்லாவரம் வட்டங்களில் மக்கள் தொகை அதிகம். இந்த வட்டங்களில் ஏராளமான பெரிய கிராமங்கள் உள்ளன. மக்கள் தொகை அதிகரித்து விட்டதால், ஒரு விஏஓ-வால் பொதுமக்களின் மனுக்களை கையாள சிரமப்பட வேண்டியுள்ளது. காலமாற்றத்துக்கு ஏற்ப, மக்கள் தொகை மற்றும், சேவை அடிப்படையில் விஏஓ-க்கள் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில், பல்லாவரம் வட்டத்தில் மக்கள் தொகை மற்றும் சேவையின் அடிப்படையில் புதிய பணியிடங்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி பம்மல், அனகாபுத்தூர், பல்லாவரம் என 3 கிராமங்களுக்கு புதிதாக, 3 விஏஓ பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதேபோல் அனகாபுத்தூர், பம்மல், பல்லாவரம் வடக்கு, தெற்கு என, வருவாய் ஆய்வாளர்கள் பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், தாம்பரம் வட்டத்தில் புதிய விஏஓ பதவியிடங்கள் உருவாக்கப்படவில்லை. மாறாக வருவாய் ஆய்வாளர் பணியிடங்கள் மட்டும் உருவாக்கப்பட்டுள்ளன.
ஏற்கெனவே மேடவாக்கம், தாம்பரம், மாடம்பாக்கம், சிட்லபாக்கம் என 4 வருவாய் ஆய்வாளர் பணியிடங்கள் உள்ளன. தற்போது பெரும்பாக்கம், முடிச்சூர் என 2 புதிய வருவாய் ஆய்வாளர் பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளன. கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் உருவாக்காததற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. குறிப்பாக முடிச்சூர், மதுரப்பாக்கம், பெரும்பாக்கம், பெருங்களத்தூர், மாடம்பாக்கம், செம்பாக்கம், ராஜகீழ்ப்பாக்கம் போன்ற கிராமங்கள் மிகப்பெரிய கிராமங்கள் ஆகும். இவற்றை பிரித்து புதிய விஏஓ, பணியிடங்கள் உருவாக்கி இருக்கலாம்.
ஆனால், தாம்பரம் வட்டத்தில் உள்ள அதிகாரிகளுக்கும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடு காரணமாக இந்த பணி நடத்தப்படவில்லை என கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் தலையிட்டு சேவை அடிப்படையிலும், மக்கள் தொகை அடிப்படையில் புதிய கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் கூறியதாவது: மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 1984-ம் ஆண்டு 12,563 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் உருவாக்கினார். அதன்பின் மக்கள் தொகை பெருக்கம், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், பேரிடர் காலப்பணிகளை கருத்தில் கொண்டு, தற்போதுள்ள நிலைக்கு ஏற்ப பெரிய கிராமங்களை பிரித்து புதிதாக பணியிடங்கள் தோற்றுவிக்க வேண்டும். கிராம கணக்குகள், நிலவரி வருவாய், சாகுபடி பரப்பு, சிட்டா, அடங்கல் என பல்வேறு ஆதார ஆவணங்கள் விஏஓக்களிடம் உள்ளன.
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் வட்டத்தில் மக்கள் தொகை பெருகி விட்டதால் பல கிராமங்கள் பெரிதாக உள்ளன. ஆனால் சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்த பணியிடங்களே இன்றும் தொடர்கிறது. இதனால் விஏஓ-க்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. புதிய பணியிடங்களை உருவாக்க பெரிய கிராமங்களை பிரிக்கலாம்.
குறிப்பாக பெரும்பாக்கம், பெருங்களத்தூர், முடிச்சூர், ராஜகீழ்ப்பாக்கம் போன்ற பகுதிகளில் மக்கள் தொகை அதிகம் உள்ளது. வருவாய் கிராமங்கள் மக்கள் தொகை, நிலப்பரப்பின் அடிப்படையில் அமைக்கப்படுகின்றன. ஆனால் தமிழகத்தில் வருவாய் கிராமங்கள் நீண்ட காலமாக பிரிக்கப்படவில்லை. இதனால்விஏஓ-க்கள் பணிச்சுமையால் அவதிப்படுகின்றனர்.
மேலும் விவசாயிகளுக்கு பயிர் சேதங்களுக்கு இழப்பீடு, சமூகம், வருமானம், பிறப்பு, பட்டா மாற்றம், ஆண் குழந்தை இல்லை, திருமணம், கடன் தீர்வு, ஓ.பி.சி. உள்ளிட்ட 23-க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் விஏஓ-க்களால் வழங்கப்படுகின்றன. மக்கள் நலனை கருத்தில் கொண்டும் விஏஓ-க்களின் பணிச்சுமையை குறைக்கவும் கோரிக்கையை அரசு நிறைவேற்ற முன்வர வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT