தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்: ஆந்திர துணை முதல்வர் வலியுறுத்தல்

பவன் கல்யாண்
பவன் கல்யாண்
Updated on
1 min read

சென்னை: நல்லிணக்கம், பரஸ்பர ஒத்துழைப்பு மூலம் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்று ஆந்திராவின் ஜனசேனா கட்சியின் தலைவரும் அம்மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் எக்ஸ் வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் சமீபத்தில் 5 வெவ்வேறு சம்பவங்களில் 24 இந்திய மீனவர்கள் இன்னல்களுக்கும், தாக்குதலுக்கும் உள்ளாகியிருப்பது மிகவும் கவலையளிக்கிறது. குறிப்பாக, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த நமது மீனவர்கள் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர். அவர்கள் காயமடைந்து, வாழ்க்காதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது மிகுந்த கவலையளிக்கிறது.

இந்தியா மற்றும் இலங்கை இடையே உள்ள ராஜாங்க நல்லுறவுகளை அடிப்படையாக கொண்டு, இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க, நமது இந்திய வெளியுறவுத் துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் மூலமும், பரஸ்பர ஒத்துழைப்பின் மூலமும், இரு நாடுகளும் இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் ஏற்படாத வகையில் துரிதமான தீர்வை காண வேண்டும். எல்லைகள் மதிக்கப்பட வேண்டும்.

அதேவேளையில், இரு நாடுகளின் மீனவர்களின் கண்ணியமும், மனித உரிமைகளும் பாதுகாக்கப்பட்டு, நல்லிணக்கத்தின் மூலமும், பரஸ்பர ஒத்துழைப்பின் மூலமும், மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in