Published : 05 May 2025 04:35 AM
Last Updated : 05 May 2025 04:35 AM
சென்னை: மாணவர்களின் உயரை குடிக்கும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்க அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
அன்புமணி: நீட் தேர்வில் வெற்றிபெற முடியுமா என்ற அச்சத்தில் மேல்மருவத்தூரை சேர்ந்த கயல்விழி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
2017-ம் ஆண்டில் மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு ஆண்டும் தற்கொலைகள் நிகழ்கின்றன. கடந்த இரு மாதத்தில் 5 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நீட் தேர்வு ஒழிக்கப்படவில்லை என்றால் தற்கொலைகள் தொடர்வதையும் தடுக்க முடியாது.
நீட் தேர்வு தற்கொலைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும். வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக சட்டப்போராட்டம் நடத்துவோம் என்று வசனம் மட்டும்தான் பேசுகிறது. நீட் தேர்வால் மருத்துவ கல்வியின் தரம் உயரவில்லை.
மருத்துவ கல்வி வணிகமயமாவது குறையவில்லை. இதை தெரிந்தும் தேர்வை நடத்தியே தீருவோம் என பிடிவாதம் பிடிக்காமல் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். மாநில அரசும் அதற்காக என்ன திட்டம் வைத்திருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.
பெ.சண்முகம்: மாணவர்களின் உயிரைக் குடிக்கும் நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை மத்திய பாஜக அரசு ஏற்காததன் விளைவாகவே இதுபோன்ற தற்கொலைகள் தொடர்கின்றன. எனவே, மத்திய அரசு இனியும் தாமதிக்காமல் உடனடியாக விலக்களிக்க வேண்டும்.
தற்கொலை செய்து கொண்ட மாணவியின் குடும்பம் மிகவும் வறிய நிலையில் இருப்பதால் அக்குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு இருவரும் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT